close
Choose your channels

தமிழ்த் திரையுலகின் 'தங்கமகன்' தனுஷ். பிறந்த நாள் சிறப்பு பார்வை

Tuesday, July 28, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பல கிராமத்து கதையம்சம் உள்ள வெற்றிப்படங்களை இயக்கிய கஸ்தூரி ராஜாவின் வாரிசுகளாக இருந்தாலும் அவருடைய பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு திரையுலகில் தங்களுக்கென ஒரு புதுமையான பாதையை அமைத்து அதில் ஜெயித்தும் காட்டியவர்கள் செல்வராகவன் மற்றும் தனுஷ். குறிப்பாக தனுஷின் கடந்த சில வருட முன்னேற்றம் அபரீதமானது. கடந்த 2002ஆம் ஆண்டு 'துள்ளுவதோ இளமை படத்தில் பள்ளி மாணவனாக அறிமுகமான தனுஷ் பத்தே வருடங்களில் அகில இந்திய அளவில் புகழ் பெற்றதோடு மட்டுமின்றி தேசிய விருதும் பெற்றும் யாரும் தொட முடியாத உயரத்தை அடைந்துள்ளார். அப்படிப்பட்ட ஒரு இளம் கலைஞர் தனுஷ் இன்று தனது 32வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதலில் நமது உளங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

துள்ளுவதோ இளமை' படத்தில் அப்பாவி மாணவனாக அறிமுகமான தனுஷ், அடுத்த படமான 'காதல் கொண்டேன்' படத்தில் அவருடைய சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் அப்பாவி மற்றும் மிரட்டலான நெகட்டிவ் கேரக்டரில் நடித்தார். தனுஷின் முதல் சூப்பர் ஹிட் திரைப்படம் இதுதான். இதன் பின்னர் தனுஷ் நடித்த மூன்றாவது படமான 'திருடா திருடி' முதல் இரு படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது. படுஜாலியான இந்த படமும் சூப்பர் ஹிட் ஆக, தனுஷ், கோலிவுட்டில் ஒரு கவனித்தக்க நடிகராக மாறிவிட்டார்.


இதன்பின்னர் புதுக்கோட்டையில் இருந்து சரவணன், சுள்ளான், தேவதையை கண்டேன், ஆகிய படங்களில் நடித்த தனுஷ், முதல்முறையாக கேமரா கவிஞர் பாலுமகேந்திராவின் 'அது ஒரு கனாக்காலம்' படத்திலும் நடித்தார். பின்னர் மீண்டும் அண்ணன் செல்வராகவனின் 'புதுப்பேட்டை' படத்தில் நடித்த தனுஷ், அந்த படத்தில் நடித்த கொக்கி குமார்' கேரக்டர் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நிற்கும்படி செய்தார். இதற்கு அவர் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 'வை ராஜா வை' படத்தில் மீண்டும் அவர் கொக்கி குமாராக நடித்தபோது கிடைத்த வரவேற்பே சாட்சி.

தனுஷின் நடிப்புத்திறனை முழு அளவில் வெளிப்படுத்திய பெருமை இயக்குனர் வெற்றிமாறனையே சேரும். அமைதியான, அதே நேரத்தில் அழுத்தமான ஒரு கேரக்டரை தனுஷை நம்பி 'பொல்லாதவன்' படத்தில் கொடுத்தார் வெற்றிமாறன். வெற்றிமாறன் நம்பிக்கைக்கு ஏற்றவாறு மிக அபாரமாக அந்த படத்தில் நடித்த தனுஷ், அப்போதே தேசிய விருதுக்கு தயாராகிவிட்டதாக அனைவராலும் நம்பப்பட்டது. அந்த நம்பிக்கை தனுஷ் மீண்டும் வெற்றிமாறனுடன் இணைந்த 'ஆடுகளம்' படத்தில் நிரூபணம் ஆனது. ஆம் தனுஷ்-வெற்றிமாறன் இணைந்து உருவாக்கிய 'ஆடுகளம்' திரைப்படம் தனுஷுக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது. தேசிய விருது மட்டுமின்றி அந்த படத்திற்காக தனுஷ், SIIMA, Filmfare, Vijay விருதுகளையும் பெற்றார்.

கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை கெட்டியாக பிடித்து கொண்ட பின்னர் பாலிவுட்டில் 'ராஜண்ணா' என்ற படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ், முதல் படத்திலேயே ரூ.100 கோடி வசூல் கொடுக்கும் படத்தை கொடுத்த நடிகராக பாலிவுட்டிலும் புகழ்பெற்றார். பின்னர் மீண்டும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் மற்றும் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசனுன் இணைந்து ஷமிதாப் என்ற படத்தில் அமிதாப்புக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு நடித்து அனைவரின் பாராட்டினையும் பெற்றார். கமல், ரஜினியை அடுத்து அமிதாப்புடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற தமிழ் நடிகர் தனுஷ் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட், பாலிவுட் படவுலகில் நடிகராக வெற்றி பெற்ற தனுஷ் முதல்முறையாக வொண்டர்பார் பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து, அதன் மூலம் 'எதிர்நீச்சல்', வேலையில்லா பட்டதாரி, வை ராஜா வை, காக்கி சட்டை, மாரி போன்ற படங்களை தயாரித்து, ஒரு வெற்றி தயாரிப்பாளராகவும் வலம் வந்தார். மேலும் தனக்கு இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த வெற்றிமாறனுடன் இணைந்து 'காக்கா முட்டை' என்ற படத்தை தயாரித்து அதிலும் தேசிய விருதை வென்றார். தற்போது விஐபி 2, நானும் ரெளடிதான், வடசென்னை ஆகிய படங்களை தயாரித்து வரும் தனுஷ் தொடர் வெற்றிகளை பெற இந்த பிறந்த நாளில் வாழ்த்துவோம்.

நடிப்பு மட்டுமின்றி தனுஷுக்கு இசையிலும் ஆர்வம் உண்டு என்பதை அவர் பாடிய பல பாடல்கள் நிரூபித்துள்ளன. புதுக்கோட்டையில் இருந்து சரவணன் படத்தில் 'நாட்டு சரக்கு' என்று தொடங்கும் பாடல் மூலம் பாடகராக அறிமுகமான தனுஷ், அதன் பின்னர் பல பாடல்களை பாடினாலும், '3' படத்தில் அவர் பாடிய 'ஒய் திஸ் கொலைவெறி' பாடல் தமிழகம், இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் புகழ்பெற்றது. தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்த அந்த பாடலை பல மொழி பேசும் மக்கள் ரசித்து கேட்டனர். இப்பொழுதும் அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அவர் இரண்டு அல்லது மூன்று பாடல்களை பாடிக்கொண்டுதான் வருகிறார். மேலும் அவர் 'மயக்கம் என்ன' படத்தில் இருந்து பாடலாசிரியராகவும் மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத், விஜய் படங்களை அடுத்து நல்ல ஓபனிங் கொடுக்கும் படங்களாக தனுஷ் படங்கள் இருப்பதால் அவர் நடித்த படங்களை தியேட்டர் அதிபர்களும், விநியோகிஸ்தர்களும் தைரியமாக வாங்கி வெளியிடுகின்றனர். அதை மெய்ப்பிப்பதுபோல் சமீபத்தில் வெளியான 'மாரி' மிகக்குறுகிய நாட்களில் ரூ.50 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளது. 19 வயதில் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்து 31 வயதில் 25 படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் தங்கமகனாக அனைவரின் மனங்களிலும் தனுஷ் இடம்பிடித்துள்ளார். சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்ற பெருமையை பெற்ற தனுஷ், விரைவில் அடுத்த சூப்பர் ஸ்டாராக மாறுவார் என்று நம்பிக்கையில் அவருக்கு மீண்டும் ஒருமுறை எங்களின் அன்பார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்க்களை தெரிவித்து கொள்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.