close
Choose your channels

அரசியலை நோக்கி நகர்த்தப்படுகிறாரா கமல்ஹாசன்?

Monday, July 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக அரசியலில் சினிமா நடிகர்களின் ஆதிக்கம் இருந்தது போல் மற்ற மாநிலங்களில் இருந்திருக்குமா? என்பது சந்தேகமே. பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா ஆகியோர் சினிமா பின்புலத்தில் இருந்து அரசியலுக்கு வந்து முதல்வர்களாக பணியாற்றியவர்கள். இன்றைய அரசியல் களத்திலும் சினிமா நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகம் தான். இந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்தே அரசியல் கருத்துக்களை ஆணித்தரமாக கூறிவந்தபோதிலும் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதில் விருப்பம் இல்லாமல் இருந்தவர் கமல்ஹாசன்.
திரைத்துறையில் சிவாஜி கணேசனுக்கு பின்னர் கமல்ஹாசனின் பாதிப்பு இல்லாமல் எந்த நடிகரும் இதுவரை நடித்ததில்லை, இனியும் நடிக்க போவது இல்லை. அந்த அளவுக்கு திரைத்துறையில் பல சாதனைகளை புரிந்தவர், இனியும் பல சாதனைகள் செய்ய காத்திருப்பவர். கமல்ஹாசன் திரைத்துறையில் இருந்தாலும் கடந்த பல வருடங்களாகவே அரசியல் குறித்தும் தனது கருத்தை எவ்வித தயக்கமும் இன்றி மனதில் தோன்றுவதை தைரியமாக கூறும் இயல்பினை உடையவர். அவரது கருத்துக்கள் அரசியல்வாதிகளை அதிருப்தி அடைய செய்தாலும் பொதுமக்களின் பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு பிரச்சனையின் போது கமலின் ஆணித்தரமான கருத்துக்கள் பொதுமக்களை விழிப்புணர்வை ஏற்பட செய்தது என்பது அறிந்ததே. பல நடிகர்கள் மாணவர்களின் மத்தியில் உரையாடி தங்களை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் விளம்பரப்படுத்தி கொள்ள முயன்றபோது, நடிகர்கள் யாரும் போராட்டக்களத்திற்கு செல்ல வேண்டாம், இந்த வெற்றியை யாரும் பகிர்ந்து கொள்ள வேண்டாம், இது முழுக்க முழுக்க மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வெற்றி என்று சொன்ன ஒரே நடிகர் கமல்தான்.
மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் அன்றைய முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் நேரில் சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியவர் கமல்தான். கமல் கூறியபடி ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் கடைசி நேர வன்முறையை தவிர்த்திருக்கலாம் என்பதே பலரது கருத்தாக பின்னாளில் இருந்தது. சுனாமி உள்பட பல விஷயங்களை தீர்க்கதரிசனமாக திரைப்படத்தில் கூறிய கமல், அரசியல் களத்திலும் கூறிய இந்த தீர்க்கதரிசன கருத்தை ஓபிஎஸ் அவர்கள் கொஞ்சம் காது கொடுத்து கேட்டிருக்கலாம் என்பதே பலரின் எண்ணமாக இருந்தது.
இந்த நிலையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியை நடத்தும் தனியார் தொலைக்காட்சி டி.ஆர்.பிக்காக எதையும் செய்யும் என்பது தெரிந்ததே. அது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தொடர்ந்தது. காயத்ரி கூறிய அந்த சர்ச்சைக்குரிய வார்த்தையை எடிட் செய்திருந்தாலோ, அல்லது மியூட் செய்திருந்தாலோ எந்த பிரச்சனையும் எழுந்திருக்காது. ஆனால் டிஆர்பிகாக அந்த தொலைக்காட்சி செய்திருந்தபோதிலும் நிகழ்ச்சியை நடத்திய கமல், நியாயமாகவே நடந்து கொண்டார். காயத்ரியின் கூறிய பொய்யை பலர் முன் வெளிப்படுத்தி அவருடைய உண்மையான முகத்தை அனைவருக்கும் தெரியும்படி செய்து நடுநிலையுடன் நடந்து கொண்டார். இவ்வளவிற்கு காயத்ரியின் தாய், தந்தை இருவருமே கமலுக்கு நெருக்கமானவர்களாக இருந்தபோதும் தான் எடுத்து கொண்ட பணியில் நேர்மையை கடைபிடித்து அனைவர் மனதிலும் நின்றுவிட்டார் கமல். காயத்ரி மட்டுமின்றி கடந்த சனிக்கிழமை அனைத்து பங்கேற்பாளர்களையும் கேள்வியால் துளைத்தெடுத்தது பார்வையாளர்கள் மத்தியில் திருப்தியை ஏற்படுத்தியது. கமல் நேர்மையில் சமரசம் செய்ய மாட்டார் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு
இந்த நிலையில் கமல் தமிழக அரசு மீது கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு தகுந்த பதிலளிக்காமல் அவரை மிரட்டும் வகையில் அமைச்சர்கள் ஈடுபடுவதை பொதுமக்கள் ரசிக்கவில்லை என்பது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படும் கருத்துக்களில் இருந்து தெரியவருகிறது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் ஓபிஎஸ் அணியினர் அரசியல் லாபத்திற்காக கமலுக்கு ஆதரவு கொடுப்பதாக எடுத்து கொண்டாலும் பொதுமக்கள் மத்தியில் கமலுக்கு அமோக ஆதரவு கிடைத்திருப்பது, அவரது உண்மைத்தன்மைக்கு கிடைத்த ஆதரவாகவே நினைக்க தோன்றுகிறது.
அரசியலுக்கு வரமாட்டேன் என்று அவர் இன்று வரை கூறிக்கொண்டிருந்தாலும் அவரது பாணியிலேயே சொல்வதென்றால் அவர் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் பொதுமக்கள் நினைக்க தோன்றிவிட்டனர். கமல் அரசியலை விட்டு ஒதுங்கி ஒதுங்கி போனாலும் இன்றைய அரசியல்வாதிகள் அவரை வரவழைத்துவிடுவார்கள் போல் தெரிகிறது.
இன்றைய அரசியல்வாதிகள் பலருக்கு இல்லாத திறமை, மொழிப்புலமை, உலக அரசியல், ஆராய்ந்து எடுக்கும் முடிவு ஆகியவை கமல் இடத்தில் அதிகம் உண்டு. எந்த ஒரு செயலை செய்தாலும் அதை மிக நுணுக்கமாக செய்ய வேண்டும் என்பதில் உறுதி கொண்டவர் கமல். உதாரணமாக 'சதி லீலாவதி' படத்தில் கமல், கோவைத்தமிழில் கலக்கியிருப்பார். இந்த படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்யும்போது இதே போன்று கன்னடத்தில் வெகுசிலரே பேசும் Hubli-Dharwad பகுதி ஸ்லாங்கை பயன்படுத்தியிருந்தார். ஒரு ரீமேக் படம் தானே, காமெடி படம் தானே என்று ஏனோதானோ என்று ரீமேக் செய்யாமல், ரீமேக்கிலும் 100% ஃபெர்பெக்ட் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் கமல்ஹாசன்.
ஒரு சினிமாவிலேயே இந்த அளவுக்கு உண்மையாக உழைக்கும் ஒருவர் கையில், ஒரு மாநிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பை கொடுத்தால் அவர் எந்த அளவுக்கு உண்மையாக இருப்பார் என்பதில் மக்களுக்கு தற்போது நம்பிக்கை எழுந்துள்ளது. இந்த நம்பிக்கை நாள் ஆக ஆக அதிகமாகும் பட்சத்தில் இன்னொரு கோலிவுட் நட்சத்திரத்தின் கையில் ஆட்சி போவதை தவிர்க்க முடியாது என்றே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
கேபிள் டிவி குறித்தும், சாட்டிலைட் சேனல்கள் குறித்தும் கமல் கூறிய கருத்தை பலர் அன்றைய தினத்தில் எதிர்த்தனர். ஆனால் இன்று இந்த இரண்டிலும் இருந்து தான் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பெரிய தொகை வருமானமாக வந்து கொண்டிருக்கின்றது. அதேபோல் டிடிஎச் குறித்து கமல் விஸ்வரூபம் படத்தின்போதே பேசியது மட்டுமின்றி அதை செயல்படுத்தவும் இறங்கினார்., ஆனால் அன்று அவருக்கு ஏற்பட்ட பலத்த எதிர்ப்பால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் தற்போது கமலின் கருத்து சரிதான் என்று பல தயாரிப்பாளர்கள் புரிய ஆரம்பித்துள்ளனர். பத்து வருடங்களுக்கு பின்னர் நடக்கவிருப்பதை சினிமாவில் புகுத்தும் திறமை கொண்ட கமல்ஹாசன், கண்டிப்பாக அரசியலுக்கு வந்தால் இதேபோன்ற தீர்க்கதரிசன முடிவுகளை மக்களின் நலனுக்காக எடுப்பார் என்று நம்பலாம்.
எந்த தகுதியும் இல்லாத பல தலைவர்களை நாம் தேர்வு செய்து நம்மை ஆட்சி செய்ய பலமுறை அனுமதித்துள்ளோம். ஒரே ஒரு முறை வித்தியாசமாக சிந்தித்து, கமல் போன்ற உண்மையான திறமை உள்ளவர்களுக்கு ஒருமுறை ஆதரவு கொடுத்துதான் பார்ப்போமே என்ற மனநிலையை கமல் ஏற்படுத்துவாரோ இல்லையோ, நிச்சயம் அவரை விமர்சனம் செய்யும் அரசியல்வாதிகள் ஏற்படுத்திவிடுவார்கள் போல் தெரிகிறது. அந்த வகையில் நாம் இன்றைய அரசியல்வாதிகளுக்கு நிச்சயம் நன்றி கூறத்தான் வேண்டும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.