close
Choose your channels

ரசிகர்கள் வாங்கும் ஒவ்வொரு டிக்கெட்டிலும் விவசாயிகளுக்கு ஒரு ரூபாய்! விஷால் முக்கிய அறிவிப்பு

Friday, April 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஏப்ரல் 2ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் பதவியேற்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விஷால் கஷ்டப்படும் விவசாயிகளுக்கு உதவுவது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர் கூறியதாவது:

"இது ஒரு மிகப்பெரிய குடும்பம். அதனால்தான் அனைத்து சங்கங்களும் வந்து வாழ்த்து தெரிவித்தார்கள். மாற்றம் வேண்டும் என்ற நம்பிக்கையால் நாங்கள் வந்துள்ளோம். தாணு சார், கேயார் சார், எஸ்.ஏ.சி சார் உட்பட அனைவரும் வந்து வாழ்த்தியதற்கு நன்றி. தமிழ் சினிமாவிற்கு பொற்காலம் பிறந்துவிட்டது.

யார் வந்தாலும் நல்லது செய்ய வேண்டும் என்று உழைக்கிறோம். இன்றைக்கு முதல் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தயாரிப்பாளர்கள் என்ற முதலாளியை எப்படி காப்பாற்றுவது என்று பேசினோம். நலிந்த என்ற வார்த்தையே இருக்கக் கூடாது. எங்களுடைய அணி 24 மணி நேரம் உழைக்கப் போகிறது.

உறுப்பினர்களுக்கு பென்ஷன் தொகையை முதலில் செயல்படுத்தவுள்ளோம். விவசாயிகள் பிரச்சினைக்கு ஏதாவது உதவ வேண்டும் என்று பேசினோம். தயாரிப்பாளர் சங்கம் சார்பாக, தமிழ்நாட்டில் திரையரங்கில் ரசிகர்கள் வாங்கும் ஒரு டிக்கெட்டில் ஒரு ரூபாய் எடுத்து விவசாயிகளுக்கு கொடுக்க உள்ளோம். அதனால் எவ்வளவு பணம் வரும் என எனக்கு தெரியாது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதில் வரும் மொத்த தொகையையும் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு கொடுக்கப்படும்.

அனைத்து சங்கங்களும் இணைந்தால் இன்னும் விவசாயிகளுக்கு நிறைய நல்லது செய்யலாம். தலைப்பு, சென்சார், வரிச்சலுக்கை உள்ளிட்ட அனைத்து விஷயங்களும், அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் பொதுவானதாக செயல்படும். திருட்டு விசிடிக்கு எதிராக ஒரு நல்ல விஷயம் நடைபெறவுள்ளது. அது குறித்த முறையான அறிவிப்பு அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்.

இந்த ஒற்றுமையை வைத்து நிறைய விஷயம் செய்யலாம். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. உங்களுக்காக உழைப்பேன். நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இணைந்து ஒரு பிரம்மாண்டமான விருது விழா நடத்தவுள்ளோம். இந்த ஆண்டே அவ்விழா நடத்தி 10 கோடி வரை தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்டுவோம்.

ஒட்டு மொத்த இந்திய திரையுலகம் ஒன்றிணைந்து இளையராஜா சார் நிகழ்ச்சிக்கு 'இசைவோம்' என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தவுள்ளோம். இவ்விரண்டு நிகழ்ச்சிகள் மூலமாக சுமார் 15 கோடி வரை நிதி திரட்டுவோம்.

அனைத்து சங்கங்கள் இணைந்து செயல்பட்டால் ஆகஸ்ட் மாதத்துக்குள் திருட்டு விசிடி இருக்காது. படம் செய்ய எண்ணம் உள்ள தயாரிப்பாளர் அனைவருக்கும் படம் பூஜைப் போடப்பட்டதிலிருந்து படம் வெளியாகும் வரை என்ன பிரச்சினை என்றாலும் உடன் இருப்போம்.

மானியம் தொடர்பாக பேச தமிழக முதல்வரிடம் நேரம் கேட்போம். 10 ஆண்டுகளாக மானியம் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவர் நேரம் கொடுக்கும் போது நேரில் பேசி வலியுறுத்திவோம்.

இவ்வாறு தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.