close
Choose your channels

ஜெயம்ரவியின் 'வனமகன்'. திரை முன்னோட்டம்

Monday, May 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'தனி ஒருவன்' சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்னர் முன்னணி நடிகர்களின் பட்டியலில் வலுவான இடத்தை பிடித்துவிட்ட நடிகர் ஜெயம் ரவி நடித்த 'போகன்' சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில் அவர் நடித்த அடுத்த படமான 'வனமகன்' திரைப்படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து சென்சாரில் 'யூ' சர்டிபிகேட்டும் பெற்றுவிட்டது. 140 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை தற்போது பார்ப்போம்

காடும் காடு சார்ந்த இடங்களும்தான் இந்த படத்தின் கதைக்களம். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அந்தமான், நிகோபர் தீவுகள், தாய்லாந்து போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவிக்கு இந்த படம் இன்னொரு 'பேராண்மை' படம் போல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் ஜெயம் ரவி காட்டில் வசிக்கும் இளைஞர் கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் அவருக்கு இந்த படத்தில் வசனமே இல்லை என்றும் முழுக்க முழுக்க சைகையிலேயே நடித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அதே நேரத்தில் அவர் வாய்பேச முடியாத கேரக்டரில் நடித்துள்ளாரா? என்பதும் படக்குழுவினர்களால் உறுதி செய்யப்படவில்லை.

இந்த படத்தின் நாயகியாக பாலிவுட் நடிகை சாயிஷா ஷேகல் நடித்துள்ளார். இவர் பழம்பெரும் பாலிவுட் நடிகை திலீப்குமார் அவர்களின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. நடனத்தில் திறமையுள்ள இந்த நடிகை தனது முதல் தென்னிந்திய படமான 'வனமகன்' ரிலீசுக்கு முன்னரே 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவி, சாயிஷா தவிர இந்த படத்தில் சப்போர்ட்டிங் கேரக்டர்களில் வருண், தம்பி ராமையா, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, ரம்யா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இயக்குனர் விஜய்யின் ஆஸ்தான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது ஹீரோவாக பிசியாக உள்ளதால் முதல்முறையாக விஜய் படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். ஹாரீஸ் ஜெயராஜ் அவர்களுக்கு இந்த படம் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஐந்து பாடல்களை ஹாரீஸ் ஜெயராஜ் கம்போஸ் செய்துள்ளார். பொதுவாக விஜய்யின் அனைத்து படங்களுக்கும் நா.முத்துகுமார் தான் பாடல்கள் எழுதுவார். ஆனால் அவர் சமீபத்தில் மரணம் அடைந்ததை அடுத்து இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் மதன்கார்க்கி எழுதியுள்ளார். இருப்பினும் நா.முத்துகுமார் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த படத்தின் பாடல்களின் முதல் சிடியை நா.முத்துகுமாரின் மகன் ஆதவன் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் மிரட்டும் டிரைலரில் இருந்தே இது ஒரு வித்தியாசமான விஜய் படம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. டிரைலரில் வரும் வாசகங்களான இந்தியாவின் கரை அருகே கறை படாத தீவு, மாசுலகம் காணாத தூயவர்கள் வீடு, அவர்கள் வழி, அவர்கள் விதி, அவர்களில் ஒருவன் காதலில் விழுந்தால் என்ன நடக்கும் என்பதில் இருந்தே இந்த படத்தின் கதையை யூகிக்க முடிகிறது. காட்டில் பிறந்து வளர்ந்த ஒரு இளைஞன் நகருக்குள் வந்து காதலில் விழுந்தால் என்ன நடக்கும் என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.எல்.அழகப்பன் தயாரிப்பில் திரு ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் இந்த வருடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்களில் ஒன்று. இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனினும் வரும் ஜூன் மாதம் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.