close
Choose your channels

விக்ரம்பிரபுவின் 'சத்ரியன்' - திரை முன்னோட்டம்

Monday, May 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் இளையதிலகம் பிரபுவின் மகனுமான விக்ரம்பிரபு, 'கும்கி' படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் 'இவன் வேற மாதிரி', 'அரிமா நம்பி', சிகரம் தொடு' உள்பட ஒருசில வெற்றி படங்களில் நடித்து கோலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். இந்த நிலையில் விக்ரம்பிரபு நடிப்பில் உருவாகியுள்ள 'சத்ரியன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக தயார் நிலையில் உள்ளது.
சசிகுமார் நடித்த 'சுந்தரபாண்டியன்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'இது கதிர்வேலன் காதல்' ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ள மூன்றாவது படம் தான் 'சத்ரியன்'. அஜித்தின் 'விவேகம்' படத்தை தயாரித்துள்ள சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் விக்ரம்பிரபு, மஞ்சிமா மோகன், கவின், ஐஸ்வர்யா தத்தா, உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதிரடி ஆக்சன் படமான 'சத்ரியன் திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்த படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றதில் இருந்தே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மே 19ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த படம் ஜூன் 9ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் நடந்த ஒரு உண்மைச்சம்வத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருச்சியிலேயே படமாக்கப்பட்டுள்ளது. ஆக்சன் மற்றும் காதல் காட்சிகள் சம அளவில் இந்த படத்தில் உள்ளதாகவும், இதுவொரு கமர்ஷியல் படமாக அமையும் என்று நம்புவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த படம் குறித்து இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் பேட்டி ஒன்றில் கூறியபோது, '“இன்றைய சூழலில் ரசிகர்கள் குடும்பத்துடன் பார்க்கும் படங்கள்தான் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் தரும் என்ற நிலை இருக்கிறது. இயல்பாகவே நான் உறவினர்களோடு சினிமா பார்க்கும் குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதால் ஒரு குடும்பம் படத்தில் என்னவெல்லாம் எதிர்பார்க்கும் என்பது தெளிவாகத் தெரியும். அதனால்தான் என்னுடைய முந்தைய இரண்டு படங்களுமே குடும்பங்களை கொண்டாட வைத்தது. ஆனால் சத்ரியன்` படம் முந்தைய இரு படங்கள் போன்றது அல்ல. பதிலாக கதையே ரவுடியிஸம், கேங்க்ஸ்டர் என்ற அடிப்படையில் அமைந்தது. எனவே எனது ஆஸ்தான குடும்ப ரசிகர்களுக்காக திரைக்கதையில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது.
படம் பார்த்து முடித்த சென்சார் அதிகாரிகள் இந்த ஆண்டு நாங்கள் பார்த்ததிலேயே ஒரு முழுமையான படம் இது என்று பாராட்டியதோடு, ஒரு நூலிழை மிஸ் ஆகியிருந்தாலும் படத்துக்கு யு/ஏ` சான்றிதழ் தரவேண்டியிருந்திருக்கும். அது ஏற்பட்டிராத அளவுக்கு நீங்கள் காட்சியமைப்பில் உழைத்திருந்தது ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிந்தது என்று மனமார பாராட்டினார்கள். என் படைப்புக்கு கிடைத்த சின்ன அங்கீகாரமாக அவர்கள் அளித்த யு` சான்றிதழையும் பாராட்டையும் ஏற்று, அதை அப்படியே ரசிகர்களுக்கு கொண்டு வந்து சேர்க்க காத்திருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.
எஸ்.ஆர்.பிரபாகரன் படக்குழுவினர்களின் உழைப்புக்கேற்ற மரியாதையை ரசிகர்கள் தருவார்களா? என்பதை படம் வெளியாகும் ஜூன் 9ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.