குழந்தைகளுக்கு கோவிட், CT ஸ்கேன் எடுக்கலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

  • IndiaGlitz, [Monday,June 28 2021]

கொரோனா பரவலின் மூன்றாவது அலை அதிகளவில் குழந்தைகளைத் தாக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக குழந்தைகளுக்கு கோவிட் டெஸ்ட் எடுக்கலாமா? அல்லது நுரையீரல் தொற்று இருக்கிறதா? என்பதை அறிய CT ஸ்கேன் எடுக்கலாமா என்பது போன்ற பல்வேறு சந்தேகங்களை பெற்றோர்கள் எழுப்பத் துவங்கி விட்டனர்.

இதுகுறித்து சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் ஏற்பாடு செய்த இணையவழி கருத்தரம் ஒன்றில் டாக்டர் நேமிநாதன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அதில் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் குழந்தைகளுக்கு கோவிட் பரிசோதனையோ அல்லது CT ஸ்கேனோ எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. குழந்தைகள் இயற்கையாகவே நோய்க்கு எதிரான ஆற்றலைப் பெற்று இருப்பார்கள் எனத் தெரிவித்து உள்ளார்.

இதனால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் குழந்தைகளுக்கு சிடி ஸ்கேன் மற்றும் கோவிட் பரிசோதனையை செய்வது அபாயகரமான விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும் எனவும் மருத்துவர் நேமிநாதன் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் வெளிப்படுத்தும் அறிகுறிகளை சரியாக கண்காணித்து உரிய காலத்தில் மருத்துவ ஆலோசனைகளைப் பெற வேண்டும். ஒருவேளை தாய்க்கு கொரோனா தொற்று செய்யப்பட்டு இருந்தாலும் முறையான சுகாதாரத்தைக் கடைப்பிடித்து அவர் தனது குழந்தைகளுக்குத் தாய்ப்பாலை தொடர்ந்து கொடுக்கலாம்.

3 ஆவது அலை குழந்தைகளை மையமாக் கொண்டு தாக்காது. 95% குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தேவை இருக்காது. மேலும் குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படாது.

குழந்தைகளை நோய்த்தொற்றில் இருந்து காப்பாற்றும் விதமாக பெரியவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும் முறையான பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கோவிட் தடுப்பில் சரியான நடத்தை விதிமுறை, தடுப்பூசி, தாய்ப்பால் புகட்டுதல், இதர தடுப்பூசிகளை முறையாகப் போட்டுக் கொள்ளுதல், கிராமங்களில் ஒருங்கிணைந்த மருத்துவச் சேவையை துவக்குவது முதலியவை மூன்றாவது அலையை வெல்வதற்கு உதவிகரமாக இருக்கும்.

மேலும் நோய்த்தொற்றை எதிர்கொள்ளும் ஆற்றல் குழந்தைகளிடையே இயற்கையாகவே அதிகம் காணப்படும். அதோடு 12-18 வரையிலான பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்த பரிசோதனையை ஐசிஎம்ஆர் மேற்கொண்டு வருகிறது. எனவே குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை வரும் 2022 ஆம் ஆண்டு எதிர்பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.