close
Choose your channels

இலவச 2 ஜிபி டேட்டா திட்டத்தை வரவேற்று முதல்வரை பாராட்டி மகிழும் மாணவர்கள்!!!

Tuesday, January 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா காரணமாக அனைத்துப் பள்ளி, கல்லூரி வகுப்புகளும் தற்போது ஆன்லைன் வழியாகவே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இணையவழி வகுப்புகளில் கலந்து கொள்ள ஏதுவாக கல்லூரி மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் வரை தினமும் 2 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இத்திட்டத்திற்கு மாணவர்கள் பெரும் வரவேற்பு அளித்து உள்ளனர். மேலும் இத்திட்டம் எல்காட் நிறுவனத்தின் மூலமாக விலையில்லா தரவு அட்டைகளாக வழங்கப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகள் மற்றும் ஜெயலலிதாக அரசு எடுத்த பல்வேறு சீரிய நடவடிக்கைகளின் காரணமாக உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களின் சேர்க்கை விகிதம் தமிழ்நாட்டில் 32% இல் இருந்து 49% ஆக உயர்ந்து உள்ளது. மேலும் கல்லூரி மாணாக்கர்கள் சிறந்த கணினித் திறன்களைப் பெற்றிட ஜெயலலிதா அரசு, அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

கோவிட் -19 பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு உள்ள நிலையில் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணையவழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த இணைய வழி வகுப்புகளில் மாணாக்கர்கள் கலந்துகொள்ள ஏதுவாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதிக் கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணாக்கர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி தரவு பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக விலையில்லா தரவு அட்டைகள் வழங்கிட நான் உத்தரவிட்டு உள்ளேன்.

இக்கோவிட் பெருந்தொற்று காலத்திலும் இணைய வழி வகுப்புகள் மூலமாக சிறந்த முறையில் கல்வி கற்றிட ஜெயலலிதாவின் அரசால் வழங்கப்படும் விலையில்லா தரவு அட்டைகளை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் மென்மேலும் சிறக்க வேண்டும் என்று மாணாக்கர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.