ம.பியில் ஆட்சியைத் தக்க வைப்பது யார்?  தொடரும் பரபரப்பு!!!

  • IndiaGlitz, [Tuesday,November 10 2020]

 

கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று காங்கிரஸ் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை அமைத்தது. ஆனால் அம்மாநில முதல்வர் கமல்நாத் மற்றும் கட்சியின் மேலிடத்தில் உள்ள சிலருடன் கருத்து வேறுபாடு கொண்ட காங்கிரஸ் அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா அக்கட்சியில் இருந்து விலகி தனது 24 ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார். இதனால் காங்கிரஸ் ஆட்சி ம.பியில் கவிழ்ந்தது.

சிந்தியாவின் ஆதரவாளர்களையும் சேர்த்து அம்மாநிலத்தில் 28 எம்எல்ஏ இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டன. அந்நிலையில் பாஜக சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபித்து ம.பியில் ஆட்சியைத் தொடர்ந்தது. அதன் முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் காலியாக இருக்கும் 28 எம்எல்ஏக்களுக்கு இடைத்தேர்தலை அறிவிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தன. கொரோனா பரவல் காரணமாக தேர்தல் அறிவிப்புகள் காலதாமதமாகி கடந்த வாரத்தில் அம்மாநிலத்தில் இடைத்தேர்தல் நடந்து முடிந்தது.

அதைத் தொடர்ந்து ம.பியில் 28 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அந்த வாக்கு எண்ணிக்கையில் பாஜக 8 இடங்களைப் பிடித்தால் பெரும்பான்மையை வென்றுவிடலாம் எனும் நிலையில் தற்போது 20 இடங்களில் முன்னிலை பெற்று இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மத்தியப் பிரதேசத்தில் பாஜக தனது ஆட்சியைத் தக்க வைக்கும் எனவும் கருத்துக் கூறப்படுகிறது.

229 சட்டமன்றத் தொகுதி கொண்ட ம.பியில் பாஜக முன்னதாக 107 உறுப்பினர்களுடன் ஆட்சியைத் தொடர்ந்தது. இந்நிலையில் பெரும்பான்மைக்கு இன்னும் 7 இடங்கள் வேண்டும் எனும் நிலையில் அக்கட்சி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. அதற்கு மாறாக காங்கிரஸ் இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் 21 இடங்களில் வெற்றிப்பெற வேண்டும் என்ற நிலைமை இருந்து வந்தது. ஆனால் தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் 7 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று இருப்பதாக தேர்தல் முடிவுகள் கூறுகின்றன.

முன்னதாக காங்கிரஸில் இருந்து வெளியேறிய ஜோதிராத்திய சிந்தியா பாஜகவில் தொடர்ந்து நிலைப்பாரா அல்லது அக்கட்சிக்கு வெற்றியைத் தேடித் தருவாரா எனப் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தன. ஆனால் தற்போது 28 க்கு 20 முன்னிலை பெற்று பாஜக ம.பியில் ஆட்சியைத் தக்க வைப்பதற்கு பெரும் உதவி புரிந்து இருக்கிறார் சிந்தியா. இதனால் சிந்தியா பாராட்டு மழையில் நனைந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.