close
Choose your channels

அவ்வளவு ஈசியா நடக்கல… எஸ்பிபி முதல் சான்ஸ் குறித்து மனம் திறந்த பால்ய நண்பர்!

Friday, June 4, 2021 • தமிழ் Comments
SPB
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

50 ஆண்டுகளுக்கு மேல் தென்னிந்தியாவையே தனது குரலால் கட்டிப்போட்டு வைத்து இருந்த ஒரு கலைஞர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். எம்ஜிஆர், சிவாஜி, கமல், மோகன், சிம்பு, தனுஷ் என்று 4 தலைமுறை நடிகர்களுக்கும் பின்னணி பாடி இருக்கிறார். எம்.எஸ்.வி, இளையராஜா, டிஆர், தேவா, ஏர்ஆர்ரஹ்மான், ஹாரிஸ் என கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் இயங்கி வரும் அனைத்து இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றி இருக்கிறார்.

16 மொழிகளில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி கின்னஸ் சாதனையை புரிந்தவர். 6 முறை தேசிய விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன், கடைசியாக பத்மவிபூஷன் என இந்தியாவில் உள்ள அனைத்து உயரிய விருதுகளையும் பெற்ற ஒரு கலைஞன். 45 படங்களுக்கு இசையமைத்து உள்ளார். 70 படங்களில் நடித்துள்ளார். 120 க்கும் மேற்பட்ட படங்களுக்கு டப்பிங் செய்துள்ளார். அதோடு பல சினிமாக்களை தயாரித்து இருக்கிறார்.

இப்படி பன்முகங்களையும் கொண்ட ஒரு அசாத்திய கலைஞனின் முதல் ரெக்காட்டிங் எப்படி இருந்தது தெரியுமா? இதுகுறித்து அவருடைய பால்ய நண்பர் முரளி அவர்கள் எஸ்பிபியின் இறுதி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்ட போது பேசியிருந்தார். அந்தத் தகவல்தான் தற்போது பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.

மேடைகளில் அரிகதை நடத்தும் ஒரு கலைஞருக்குப் பிறந்தவர்தான் இந்த எஸ்பிபி. இசையின் மேல் அளவு கடந்த ஆர்வம் உண்டு. முதலில் இன்ஜினியர் கனவோடு அனந்தப்பூரில் உள்ள ஜேஎன்டியூ கல்லூரியில் படித்தார். அப்போது டைபாய்ட் காய்ச்சல் வந்ததால் படிப்பு இடையிலேயே நின்று போகிறது. பின்பு சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் ரேடியோ இன்ஜினிரியங் படிக்கிறார். அந்தத் தருணத்தில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெறுகிறார்.

தொடர்ந்து சென்னையில் கடந்த 1964 ஆம் ஆண்டு தெலுங்கு கலாச்சார சங்கம் ஏற்பாடு செய்து இருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடகி ஜானகி கையில் பரிசு பெறுகிறார். அப்போது அவர் கொடுத்த உற்சாகம் எஸ்பிபியை மெய்சிலிர்க்க வைக்கிறது. அடுத்து கோதண்டராமன், கண்டசாலா ஆகியோர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் சிறந்த பாடகராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்கிடையில் மேடைகளிலும் கச்சேரிகளிலும் என கிடைத்த இடங்களில் எல்லாம் பாடுகிறார்.

அடுத்து சினிமா வாய்ப்புக்காக பல இசையமைப்பாளரை நாடுகிறார். பல கம்பெனிகள் ஏறி இறங்குகிறார். எப்படியாவது சினிமாவில் நுழைந்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் தனது நண்பர் முரளியோடு சேர்ந்து கோடம்பாக்கத்தில் அறை எடுத்துத் தங்குகிறார். ஒருவழியாக தெலுங்கு இசையமைப்பாளர் கோதண்டபாணி இவருக்கு ஒரு சான்ஸ் கொடுக்கிறார். கால்ஷீட் 1966 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு என முடிவாகிறது.

ஆனால் அந்த 2 மணிக்கு எஸ்பிபியை அழைத்துச் செல்ல எந்த காரும் வரவில்லை. இதனால் பதறிப்போன எஸ்பிபி, முரளி இருவரும் சைக்கிளில் சென்றுவிடலாம் என முடிவெடுக்கின்றனர். எனவே முரளி பெடலை அழுத்துகிறார். கோடம்பாக்கத்தில் இருந்து வடபழனி விஜயா ஸ்டூடியோவிற்கு செல்கின்றனர். ஆனால் அங்கிருந்த வாட்ச் மேன் இருவரையும் சரமாரியாக திட்டுகிறார். “அப்பா, அம்மா கஷ்டப்பட்டு காலேஜ்க்கு அனுப்புறாங்க… நீங்க ஷுட்டிங் பார்க்க வந்துடீங்களா? உங்களை பார்த்த பாட வந்தவங்க மாதிரி தெரியல… பொய் சொல்லாதீங்க… போய்டுங்க” என்று ஏசுகிறார்.

நேரம் போய்க்கொண்டே இருக்கிறது. இதனால் பதறிப்போன எஸ்பிபியும் முரளியும் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர். எஸ்பிபிக்கு அப்போது தமிழ் சுத்தமாவே தெரியாது. வாட்ச் மேனிடம் எதையும் சொல்லி புரிய வைக்க முடியவில்லை. எனவே இங்கிருந்து போய் விடலாம் என்கிறார் எஸ்பிபி. வேண்டாம் நீ இரு… நான் உள்ளே போறேன்.. என்று அந்த வாட்ச்மேனிடம் கெஞ்சி, ஒருவழியாக முரளி விஜயா ஸ்டூடியோவுக்குள் நுழைந்து ஆட்களை கூட்டிக் கொண்டு வருகிறார்.

இப்படித்தான் முதன் முதலில் விஜயா ஸ்டூடியோவிற்குள் எஸ்பிபி நுழைகிறார். நுழைந்தவுடனே “இன்னும் ஒரு பாட்டுக் கூட பாடவில்லை. அதற்குள் இவ்ளோ அலட்சியமா? கால்ஷுட் 2 மணிக்கு நீ நாலு மணிக்கு வர“ என்று இசையமைப்பாளர் எஸ்பிபியை திட்டுகிறார். திடுக்கிட்டுபோன எஸ்பிபி என்னை அழைத்து வருவதற்காக யாரும் வரவில்லை. அதனால் நேரம் ஆகிவிட்டது எனக் கூறுகிறார்.

விசாரித்து பார்த்தபோதுதான் தெரிந்தது, எஸ்பிபிக்காக அனுப்பப்பட்ட கார் ஒரு குழந்தையை இடித்து விட்டது என்றும் அதனால் அந்த டிரைவர் குழைந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டார் என்பதும். இப்படி கஷ்டப்பட்டு கிடைத்த வாய்ப்பில்தான் எஸ்பிபி 1966 ஆம் ஆண்டு “சீறி சீறி சீறி மரியாதை ராமண்ணா“ படத்தில் தனது முதல் பாடலை பாடுகிறார். இப்படி ஆரம்பித்த பயணம் தனது இறுதி மூச்சு வரை ஒலித்துக் கொண்டே இருந்தது. அவர் மறைவிற்கு பிறகும் அந்த குரல் பல்லாயிரக்கணக்கான மனங்களில் இன்றைக்கும் அசைப்போட்டுக் கொண்டே இருக்கிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.