தல பத்திச் சொல்ல ஒரு வார்த்தை பத்தாது… உருகும் முன்னணி கிரிக்கெட் வீரர்!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான். இவரிடம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும்போது அவர், “தோனி குறித்து சொல்ல ஒரு வார்த்தை பத்தாது” எனக் கூறி ரசிகர்கள் நெஞ்சை அள்ளி இருக்கிறார்.

ரஷீத் கான் தனது அபாரமான பந்து வீச்சு மூலம் உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். அதோடு ஐபிஎல் போட்டிகளிலும் இவரது பந்து வீச்சு சிறப்பாக பேசப்பட்டது. தற்போது ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் அவரிடம் இன்ஸ்டாவில் உரையாடி உள்ளனர். அப்போது இந்திய முன்னணி வீரர்கள் விராட் கோலி, யுவராஜ் சிங், தல தோனி குறித்து ஒரு வார்த்தையில் பதில் அளிக்குமாறு ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

இந்தச் சேலஞ்சுக்கு ஒப்புக்கொண்ட ரஷீத் கான் விராட் கோலியை “கிங் கோலி” என்றும் யுவராஜ் சிங்கை “சிக்ஸர் மன்னன்” என்றும் புகழ்ந்துள்ளார். ஆனால் தல தோனி குறித்து “அவரை வர்ணிக்க ஒரு வார்த்தை போதாது” என வித்தியாசமாகப் பதில் அளித்துள்ளார். ரஷீத் கானின் இந்தப் பதில் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.

மேலும் கடந்த காலங்களில் விளையாடிய ஒரு வீரருக்கு நீங்கள் பந்து வீச நினைத்தால் அது யாருக்காக இருக்கும் என ரஷீத் கானிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு “சச்சின்’‘ எனப் பதில் அளித்துள்ளார். அதோடு கெவின் பீட்டர்சன், ரோஹித் சர்மாவின் ஃபுல் ஷாட் என்னை மிகவும் கவர்ந்தது என ரஷீத் கான் பதில் அளித்துள்ளார்.