கொரோனா காலத்தில் தமிழக ரேஷன் கடைகளில் இலவச கோதுமை!!! பாதிப்பைக் குறைக்க சிறப்புத் திட்டங்கள்!!!

 

கொரோனா ஊரடங்கினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடந்த 5 மாதங்களாக கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மக்கள் வேலையிழந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சூழலில் பாதிப்பை குறைக்க தமிழக நியாய விலை கடைகளில் விலையின்றி பொருட்களை வாங்கிக்கொள்ள தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காகப் பல சிறப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டன.

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்காக ரூ.3,280 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெயும் வழங்கப்பட்டது. முதல் அறிவிப்பில் ஏப்ரல் மாதத்திற்கு என்று மட்டுமே கூறப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மே, ஜுன், ஜுலை மாதங்களிலும் இலவச திட்டங்களை செயல்படுத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

மேலும் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி கடந்த ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் கூடுதல் பொருட்களாக கூடுதல் அரிசி மற்றும் பருப்பு, பாமாயில் போன்றவையும் இலவசமாக வழங்கப்பட்டது. இதனால் தமிழக மக்கள் கடந்த 5 மாதங்களாக ஒருகிலோ சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாயில், அரிசி, உள்ளிட்ட பொருட்களின் தொகுப்பை இலவசமாகப் பெறமுடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ஊரடங்கில் பல விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் தொழில் நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் ஓரளவு நிலைமை சரி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இலவசங்கள் இல்லாமல் தமிழக நியாயவிலை கடைகளில் விலை கொடுத்து பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது மத்திய அரசின் உணவுப்பொருட்கள் வழங்கல் துறையின் சார்பாக பிரதமரின் கரீப் கல்யான் அன்னா யோஜனா திட்டத்தின்கீழ் தமிழக மக்களுக்கு 1 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. இத்திட்டத்தின்படி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்துப் பயனாளர்களுக்கும் தமிழக நியாய விலை கடைகளில் 1 கிலோ கோதுமை இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திட்டத்தில் கோதுமையை விரும்பும் அட்டைத்தாரர்களுக்கு மட்டுமே கோதுமை வழங்கவும், அப்படி வழங்கப்படும் இலவச கோதுமையை இலவச அரிசித் திட்டத்தில் குறைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.