சில சமைத்த உணவுகளை மீண்டும் சூடாக்கக்கூடாது? எச்சரிக்கை லிஸ்ட்!

  • IndiaGlitz, [Saturday,September 11 2021]

பெரும்பாலும் மீதமாகிவிட்ட குழம்பு, மசாலா வெரைட்டி உணவு வகைகளை நாம் மீண்டும் சூடாக்கி சாப்பிடுகிறோம். இதில் ஒருசிலர் அடுத்த வேளை வரை வைத்து சூடாக்கி சாப்பிடுகின்றனர். இன்னும் ஒருசிலர் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து அடுத்த நாள் வரை வைத்து சூடாக்கிச் சாப்பிடுகின்றனர். இப்படி செய்வதில் எந்த தவறும் இல்லாத மாதிரிதான் தோன்றும். ஆனால் இந்த சூடாக்கும் முறையினால் ஒருசில உணவுகளே விஷமாக மாறிவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சிக்கன்- சமைத்த சிக்கனை மீண்டும் சூடாக்கிச் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். காரணம் சிக்கனில் புரதச்சத்து இருப்பதால் சமைத்த கோழியை மீண்டும் சூடாக்கும்போது அதனால் செரிமான கோளாறு உண்டாகலாம். எனவே சமைத்த சிக்கனை அடுத்த வேளை உண்ணும்போது அப்படியே சூடு படுத்தாமல் சாப்பிட்டு முடித்துவிடுவது நல்லது.

கீரை வகைகள்- பச்சை காய்கறிகளைப் போலவே கீரையில் இரும்பு மற்றும் நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. எனவே சமைத்த கீரையை மீண்டும் சூடாக்கினால் அதிலுள்ள நைட்ரேடுகள் பிற காசினோஜெங்களாக மாற்றப்படுகின்றன. இது உடலுக்குக் கேடாக மாறிவிடும். எனவே கீரையை கண்டவுடன் சாப்பிட்டு முடித்து விடுவது மிகவும் நல்லது.

சாதம் - காலையில் செய்த சாதத்தை மீண்டும் குக்கரிலோ அல்லது அவனிலோ வைத்து சூடாக்கிச் சாப்பிடும் பழக்கம் பெரும்பாலான வீடுகளில் காணப்படுகிறது. ஆனால் சமைத்த அரிசியில் பாக்டீரியாக்கள் இருக்கும். இதே பாக்டீரியாவை மீண்டும் சூடுபடுத்தினால் அவை பன்மடங்காக பெருகி உணவில் விஷத்தன்மையை உண்டாக்கிவிடும். எனவே சமைத்த சாதத்தை மீண்டும் சூடுபடுத்த வேண்டாம்.

முட்டை- சமைத்த உணவுகளில் மீண்டும் சூடுபடுத்தக்கூடாத இன்னொரு முக்கியமான உணவு முட்டை. காரணம் இதிலும் புரதச்சத்து அதிகமாக இருக்கும். இதை மீண்டும் சூடுபடுத்தினால் நச்சுத்தன்மையை அதிகரித்து உடலுக்கு செரிமானக் கோளாறை ஏற்படுத்தி விடும்.

எண்ணெய் - பெரும்பாலான ஆய்வுகளில் ஒருமுறை சமைத்த எண்ணெயை மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தும்போது இதயம் தொடர்பான பிரச்சனைகள் வரும் என்று எச்சரிக்கின்றனர். அதிலும் குறிப்பாக கனோலா, சூரியகாந்தி போன்ற எண்ணெய்களை சூடுபடுத்தும்போது அவை நச்சுகளை வெளிப்படுத்துமாம்.

உருளைக்கிழங்கு - உருளைக் கிழங்கை நம்முடைய உணவில் அதிகம் பயன்படுத்துகிறோம். இப்படி பயன்படுத்தும் உருளைக் கிழங்கு உணவு வகைகளை நாம் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அது விஷமாக மாறும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு காரணம் போட்யூலிசம். எனவே உருளைகிழங்கு உணவுகளை சமைத்த உடனே சாப்பிடுவது நலம்.

காளான் - காளான்களை கொண்டு சமைக்கப்படும் உணவுகளை மீண்டும் சூடுபடுத்தும்போது அதிலுள்ள புரதச்சத்து மாற்றம் அடைந்து உணவில் நச்சுத்தன்மையை உண்டாக்குமாம். எனவே சூடுபடுத்தி உண்ணும் பழக்கத்தை மறந்துவிடுவது நல்லது.

கடல் உணவுகள் - கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் போன்றவற்றை ஏற்கனவே பிடித்தவுடன் பதப்படுத்தி இருந்தால் அவற்றைச் சமைத்து மீண்டும் சூடுபடுத்திக் கூட சாப்பிடலாம். ஆனால் உடனடியாக கடலில் இருந்து பிடித்துவரப்பட்ட கடல் உணவாக இருந்தால் அவற்றை சூடுபடுத்த வேண்டாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். காரணம் அப்படி சூடுபடுத்தும்போது நச்சுத்தன்மை அல்லது பாக்டீரியாவை உண்டாக்கி விடலாம் எனவும் கூறப்படுகிறது.

கொத்தமல்லி - இந்த பச்சைத் தாவரத்தில் அதிகளவு நைட்ரேட் இருக்கிறது. எனவே ஒருமுறை சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தினால் அதில் நச்சுத்தன்மை உண்டாகிவிடலாம்.

பீட்ரூட் - பீட்ரூட்டிலும் அதிக நைட்ரேட் காணப்படுகிறது. எனவே மீண்டும் மீண்டும் சூடாக்காமல் ஒருமுறை சமைத்து உடனே அதைச் சாப்பிட்டு விடுவது நல்லது.