குப்பையில் கிடந்த 10 பவுன் நகை: தூய்மை பணியாளரின் நேர்மையால் நடந்த பெண்ணின் திருமணம்!

  • IndiaGlitz, [Thursday,April 22 2021]

கொருக்குப்பேட்டை பகுதியில் பெண் ஒருவரின் திருமணம் நடக்க காரணமாக இருந்த தூய்மைப் பணியாளரின் நேர்மையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

சென்னை கொருக்குபேட்டையைச் சேர்ந்த மோகனசுந்தரம் என்ற தூய்மை பணியாளர் இன்று காலை குப்பைகளை தரம்பிரித்து கொண்டிருந்தபோது ஒரு பையில் பத்து பவுன் நகை இருப்பதை பார்த்து உள்ளார். இதையடுத்து உடனடியாக கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் மோகனசுந்தரம் நகைகளை ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த முனியம்மாள் என்பவர் தனது மகளின் திருமணத்திற்காக வைத்து இருந்த நகையை காணவில்லை என கதறி அழுதபடி புகார் கொடுக்க வந்துள்ளார். இது தொடர்பான விசாரணையில் மோகனசுந்தரம் குப்பையில் கண்டெடுத்த நகை முனியம்மாவுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னை வடபழனி முருகன் கோவிலில் முனியம்மாவின் மகள் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. இந்த திருமணம் நடைபெற காரணமாக இருந்த மோகன சுந்தரத்தின் தன்னலமற்ற நேர்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.