10ஆம் வகுப்பு தேர்வில் திடீர் மாற்றம்: புதிய அட்டவணை

  • IndiaGlitz, [Tuesday,May 19 2020]

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் நீதிமன்றமும் 10ஆம் வகுப்பு தேர்வு நடத்த தடை விதிக்கவில்லை. எனவே திட்டமிட்டபடி ஜூன் 1ஆம் தேதி 10ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வு நடத்த வேண்டுமா? என்ற கேள்வி எழுப்பியதோடு, 10ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். மேலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்தும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்து கொண்டிருந்தன.

இந்த நிலையில் சற்று முன்னர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளார். அது மட்டுமின்றி புதிய அட்டவணையையும் அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி ஜூன் 15ஆம் தேதி மொழித்தாள் தேர்வும், ஜூன் 17 ஆம் தேதி ஆங்கில தேர்வும், ஜுன் 19 ஆம் தேதி கணித தேர்வும், ஜூன் 20 தேதி மாற்று மொழி தேர்வும், ஜூன் 22ஆம் தேதி அறிவியல் தேர்வும், ஜூன் 24-ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வும், ஜூன் 25ஆம் தேதி தொழிற்கல்வி தேர்வும் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேதியிலாவது பத்தாம் வகுப்பு தேர்வு திட்டமிட்டபடி நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.