10ம் வகுப்பு தேர்வு வழக்கு: நீதிபதிகள் அதிரடி உத்தரவு

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இன்று பிற்பகல் 2.30 மணிக்குள் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு என்றும், மாணவர் உயிரிழந்தால் இழப்பீடு வழங்குவதை தவிர வேறு என்ன உத்தரவாதம்? என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் சற்றுமுன் தமிழக அரசின் வழக்கறிஞர் ஆஜராகி கூறியதாவது: விஞ்ஞானிகள் அறிக்கைப்படி எதிர்வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டும் என்று கணித்திருப்பதாகவும், எனவே 10 ஆம் வகுப்பு தேர்வை நடத்த இதுவே சரியான தருணம் என்றும் கூறினார்.

மேலும் இந்தியாவில் 11 மாநிலங்கள் தேர்வை நடத்தி முடித்துவிட்டதாகவும், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், இனி வரும் நாட்களில் கொரோனா தொற்று பரவல் அதிகமாகும் என்பதால் பின்னாளில் தேர்வு நடத்துவது ஆபத்தானதாக இருக்கும் என்றும் தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனையடுத்து அரசு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கை ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். ஜூன் 11ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படலாம் என்றும் அதன்பின்னரே 10ஆம் தேர்வு நடப்பது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.