இங்கிலாந்துக்கான ஒரு நாள் தூதராகத் தேர்வு செய்யப்பட்ட 18 வயது இந்தியச் சிறுமி!!!

  • IndiaGlitz, [Monday,October 12 2020]

 

சர்வதேச பெண் குழந்தைகளின் தினத்தை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவைச் சேர்ந்த கல்லூரி இளம்பெண் இங்கிலாந்து நாட்டுக்கான ஒருநாள் தூதராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ஆண்டுதோறும் அக்டோபர் 11 ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப் படுகிறது. இத்தினத்தை முன்னிட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒரு நாள் இங்கிலாந்து தூதர் போட்டியை இந்தியாவில் உள்ள இங்கிலாந்து தூதரகம் நடத்தி வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 18-23 வயதுடைய பெண்கள் கலந்து கொள்ளலாம்.

பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உலகளவில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக் காட்டுவதை நோக்கமாக கொண்டு இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. 2020 ஆம் ஆண்டுக்காக நடத்தப்பட்ட போட்டியில் தலைநகர் டெல்லியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி சைதன்யா வெங்கடேசன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதன்மூலம் அவர் இந்தியா சார்பில் இங்கிலாந்துக்கான ஒரு நாள் தூதராகப் பணியாற்ற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா காலக்கட்டத்தில் பாலின சமத்துவத்திற்கான உலகளாவிய சவால்கள் மற்றும் வாய்ப்புகளை பற்றி ஒரு நிமிட வீடியோவை சமர்பிக்கும்படி இங்கிலாந்து தூதரகம் கோரியிருந்தது. இந்தப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சைதன்யா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதனால் கடந்த புதன்கிழமை ஒரு நாள் தூதராக பதவியேற்ற இவர் தூதரகத் துறை தலைவர்களுடன் தனது பணியைத் தொடங்கினார்.

மேலும் மூத்த பெண் காவல்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல், பத்திரைக்கையாளர் சந்திப்பு மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் ஸ்டெம் உதவித்தொகைத் திட்டத்தின் தாக்கம் ஆகியவற்றைக் குறித்த ஆய்வு பணிகளையும் மேற்கொண்டார். இங்கிலாந்து தூதரகம் நடத்திய போட்டியில் வெற்றிப்பெற்று இதுவரை 4 இந்தியப் பெண்கள் இங்கிலாந்துக்கான ஒரு நாள் பெண் தூதர்களாகப் பணியாற்றி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.