நடு ரோட்டில் போலீஸ் தடுப்பை பயன்படுத்தி வாலிபால் விளையாடிய வாலிபர்கள் கைது

தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரும் நபர்களுக்கு போலீசார் நூதன தண்டனையும் எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரையில் 24 மணி நேரமும் பிஸியாக இருக்கும் சாலைகளில் ஒன்று காமராஜர் சாலை. இந்த சாலை ஊரடங்கு உத்தரவு காரணமாக வெறிச்சோடி உள்ளது. இதனை பயன்படுத்தி அந்த பகுதியை சேர்ந்த 20 வயது நாகராஜ் என்பவரும் 17 வயது சிறுவன் ஒருவரும் சாலையில் உள்ள தடுப்பை பயன்படுத்தி வாலிபால் விளையாடினர். இதனால் அந்த பகுதியாக வந்த அவசர தேவை வாகனங்களுக்கு இவர்கள் இடையூறாக இருந்ததாகவும் தெரிகிறது .

இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த மதுரை போலீசார் அந்த இடத்திற்கு சென்று இருவரையும் கைது செய்தனர். ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியே வந்தது மட்டுமின்றி போலீஸ் தடுப்பை பயன்படுத்தி வாலிபால் விளையாடிய அவர்கள் இருவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.