புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெண்களிடம் அத்துமீறல்: 30 இளைஞர்கள் கைது!

  • IndiaGlitz, [Wednesday,January 01 2020]

நேற்று இரவு உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான பெரிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடந்தது. சென்னையில் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் எந்தவித அசம்பாவிதமும் இன்றி இந்த ஆண்டு புத்தாண்டு சிறப்பான புத்தாண்டாக கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் பெங்களூரில் உள்ள சில பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெண்கள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும், இதனை அடுத்து 30 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதிக அளவு பெண்கள் ஈடுபட்டிருந்த நிலையில் பெங்களூரில் உள்ள எம்ஜி ரோடு பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பல பெண்களிடம் அத்துமீறி ஒரு சில இளைஞர்கள் நடந்ததாகவும் இதுகுறித்து சுமார் 25 பெண்களுக்கு மேல் புகார் செய்ததாகவும் இதனை அடுத்து நடந்த வாகன சோதனையில் 30 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, பெண்களிடம் அத்துமீறி பாலியல் துன்புறுத்தல் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே பெங்களூரு காவல் துறையினர் எச்சரிக்கை செய்திருந்த நிலையில் எச்சரிக்கையையும் மீறி ஒரு சில இளைஞர்கள் பெண்களை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதால் தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.