மின்கம்பியை மிதித்த சென்னை பெண் சுருண்டு விழுந்து பலி: வைரலாகும் சிசிடிவி வீடியோ

  • IndiaGlitz, [Monday,September 14 2020]

சென்னையில் தண்ணீரில் கிடந்த மின்கம்பியை மிதித்ததால் 35 வயது பெண் ஒருவர் சுருண்டு விழுந்து மரணம் அடைந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை புளியந்தோப்பு என்ற பகுதியில் நேற்று நல்ல மழை பெய்ததையடுத்து அந்த பகுதியில் உள்ள சாலையில் தண்ணீர் தேங்கி இருந்தது. இந்த நிலையில் அந்த வழியாக சென்ற 35 வயது பெண் ஒருவர் கீழே இருந்து எதையோ எடுத்துவிட்டு, அதன் பின் அவர் நடந்து சென்றபோது மின் கம்பியின் மீது தெரியாமல் மிதித்துவிட்டார். இதனையடுத்து உடனடியாக அவர் மின்சாரம் தாக்கி சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்

சம்பவ இடத்தில் மின் கம்பி வெளியே தெரிந்து கொண்டு இருப்பது குறித்து மின்சார துறைக்கு தகவல் அளித்தும் மின்சாரத் துறையினர் வரவில்லை என்று அந்த பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது

புளியந்தோப்பில் மின்சாரம் தாக்கி பெண் இறந்த சம்பவத்திற்கும் தங்கள் மின்வாரியத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், மாநகராட்சியின் தெருவிளக்கு மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து அந்த பெண் உயிரிழந்துள்ளார் என்றும், மின் இணைப்பு வரை மின்சாரத்தை வினியோகம் செய்வது மட்டுமே எங்கள் துறையின் பணி எனவும் மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது

ஒரு துறை மீது இன்னொருவர் துறை குற்றஞ்சாட்டி தப்பிக்க முயன்றாலும் மொத்தத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது