ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்! கேரளாவில் ஒரு அதிசயம்

  • IndiaGlitz, [Friday,November 15 2019]

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறப்பது என்பது உலகில் எப்போதாவது நடைபெறும் ஒரு அரிய நிகழ்வு ஆகும். அந்தவகையில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம் நடக்கும் அதிசய நிகழ்வு கேரளாவில் நடக்கவுள்ளது.

கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ள போத்தன் கோட்டை என்ற பகுதியை சேர்ந்த பிரேம்குமார்- ரமாதேவி தம்பதிக்கு கடடந்த 1995ஆம் ஆண்டு ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. 5 குழந்தைகளையும் வளர்க்க இந்த தம்பதி சிரமப்பட்டாலும், எந்த குழந்தைக்கும் ஒரு சிறுகுறை கூட ஏற்படாமல் கண்ணும் கருத்துமாக வளர்த்தனர்.

இந்த நிலையில் கடந்த 2005-ஆம் ஆண்டு பிரேம்குமார் திடீரென மரணம் அடைந்ததால் ரமாதேவி மனம் தளராமல் ஐந்து குழந்தைகளை நன்றாக வளர்த்து வந்தார். தற்போது ஒரே பிரசவத்தில் ஐந்து பேருக்கும் 24 வயது ஆகிறது. இந்த நான்கு பெண்களில் ஒருவர் டிசைனராகவும், இருவர் அனஸ்தீசியா டெக்னீஷியன்களாகவும் இன்னொருவர் ஆன்லைன் எழுத்தாளராகவும் உள்ளனர். இவர்களுடைய உடன்பிறந்த சகோதரர் ஐடி ஊழியராக உள்ளார். இந்த நிலையில் தனது 4 மகள்களுக்கும் ஒரே நாளில் திருமணம் செய்து வைக்க ரமாதேவியும் நான்கு பெண்களின் சகோதரரும் முடிவு செய்தனர்.

இதனையடுத்து தனித்தனியாக மாப்பிள்ளை பார்த்து கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி 4 பேருக்கும் 4 மாப்பிள்ளைகளுடன் ஒரே நாளில் நிச்சயதார்த்தம் நடந்தது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேரளாவின் புகழ்பெற்ற குருவாயூர் கோவிலில் 4 பெண்களுக்கும் ஒரே நாளில் திருமணம் நடைபெற உள்ளது. 4 பேருக்கும் ஒரே நாளில் திருமணம் நடக்கப்போவதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அதே வேளையில் 4 பேரும் இத்தனை நாள் ஒரே வீட்டில் ஒன்றாக வளர்ந்துவிட்டு வெவ்வேறு இடங்களுக்கு செல்லவிருப்பதால் வருத்தமாக இருப்பதாகவும் அந்த நான்கு பெண்கள் தெரிவித்துள்ளனர்.