close
Choose your channels

தமிழகச் சட்டப்பேரவை உறுப்பினர்கள் _ இதுவரை 9 பேர் மரணம்!!! யாரெல்லாம் தெரியுமா!!!

Friday, June 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகச் சட்டப்பேரவை உறுப்பினர்கள் _ இதுவரை 9 பேர் மரணம்!!! யாரெல்லாம் தெரியுமா!!!

 

கடந்த 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் அதிமுக இரண்டாவது முறையாக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது. ஆட்சி அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை 9 சட்டமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்து உள்ளனர். இதில் இரண்டு பெரிய கட்சிகளின் தலைவர்களும் அடக்கம் என்பதுதான் பெருத்த சோகம். தற்போது நடைமுறையில் இருப்பது 15 ஆவது சட்டமன்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சட்டமன்றத்தில் ஆட்சிக் கட்டிலில் இருக்கும் அதிமுக தரப்பில் 4 உயிரிழப்புகளும் எதிர்க் கட்சியான திமுக தரப்பில் 5 உயிரிழப்புகளும் நிகழ்ந்து இருக்கின்றன. இந்த உயிரிழப்புகள் அனைத்தும் நிரப்ப முடியாத பெருத்த சோகத்தைத் தமிழக மக்களுக்கு கொடுத்து இருக்கிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டு இருக்கும்போதே அதிமுக கட்சியின் திருப்பரங்குன்றம் வேட்பாளர் எஸ்.எம். சீனிவேல் மே 17, 2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றிச் செய்தியை கேட்பதற்கு முன்பே இவர் காலமானார் என்பதும் பெருத்த சோகம். இவர் மாரடைப்பு காரணமாக 25 மே, 2016 இல் உயிரிழந்தார்.

அடுத்து அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும், சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியின் எம்எல்ஏவும் அதிமுகவின் மிகப் பெரிய ஆளுமையான செல்வி. ஜெ.ஜெயலலிதா டிசம்பர் 5, 2016 அன்று உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அடுத்து திருப்பரங்குன்றனத்தின் எம்எல்ஏ ஏ.கே. போஸ் ஆகஸ்ட் 2, 2018 இல் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார். அடுத்து சூலூர் தொகுதியின் எம்எல்ஏ ஆர். கனகராஜ் மார்ச் 20, 2019 இல் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார். அதிமுகவில் இதுவரை 4 எம்எல்ஏக்கள் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

திமுகவின் அஸ்திவாரமான கலைஞர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக ஆகஸ்ட் 7, 2018 இல் உயிரிழந்தார். அவர் கட்சியின் தலைவராகவும் திருவாரூர் தொகுதியின் எம்எல்ஏ வாகவும் இருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. அடுத்து விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ ராதாமணி புற்றுநோய் காரணமாக ஜுன் 13, 2019 இல் புதுச்சேரியில் உயிரிழந்தார். அடுத்து திருவொற்றியூர் தொகுதியின் எம்எல்ஏ ஏ.கே.பி.பி. சாமி பிப்ரவரி 27, 2020 இல் கிட்னி செயலிழந்த காரணத்தால் உயிரிழந்தார். இச்சம்பவம் நடந்த அடுத்தநாளே குடியாத்தம் தொகுதியின் எம்எல்ஏ எஸ். காத்தவராயன் பிப்ரவரி 28, 2020 இல் இருதய கோளாறு காரணமாக உயிரிழந்து விட்டதாக அறிவிப்பு வெளியானது. 2 நாட்களில் திமுக 2 எம்எல்ஏக்களை இழந்து பெரும் சோகத்தில் ஆழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜுன் 10, 2020 அன்று சேப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தார்.

234 தொகுதிகளைக் கொண்ட தமிழகச் சட்டப்பேரவையில் திமுக இடைத்தேர்தலுக்குப் பின்பு 100 இடங்களை வைத்து இருந்தது. அதில் ஏ.கே.பி.பி. சாமி மற்றும் எஸ். காத்தவராயன் உயிரிழப்பு காரணமாக 98 ஆக குறைந்து தற்போது ஜெ. அன்பழகன் மரணத்தால் 97 ஆக மாறியிருக்கிறது. தற்போது தமிழகச் சட்டப்பேரவையில் 231 எம்எல்ஏக்கள் மட்டுமே இருக்கின்றனர். மேலும் வருகின்ற ஏப்ரல் 2021 உடன் தமிழகச் சட்டப்பேரவையின் காலம் முடிவடைகிறது எனவே இடைத்தேர்தல் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.