close
Choose your channels

70% வேகமாகப் பரவும் புதுவகை கொரோனா மாதிரி… இந்தியாவிலும் சிக்கலை உருவாக்குமா???

Monday, December 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

70% வேகமாகப் பரவும் புதுவகை கொரோனா மாதிரி… இந்தியாவிலும் சிக்கலை உருவாக்குமா???

 

கடந்த வாரம் முதல் பிரிட்டனில் புதுவகை கொரோனா வைரஸ் மாதிரி பரவி வருவதாகக் கூறப்பட்டது. இதற்கு முன்பும் கொரோனாவில் பல புதுவகை கொரோனா மாதிரிகள் தோற்றம் பெற்றன. ஆனால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 70% அதிவேகமாகப் பரவக்கூடிய கொரோனா தற்போது பிரிட்டனில் அதிகம் பரவி வருவதாக அந்நாட்டின் அதிபர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். இதனால் இங்கிலாந்தின் பல முக்கிய நகரங்களுக்கு மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா மாதிரிகளில் VUI-202012/01 எனும் புதிய வகையை விஞ்ஞானிகள் கடந்த வாரம் அடையாளம் கண்டு உள்ளனர். பிரிட்டனில் காணப்பட்ட இந்த வகை வைரஸ்கள் மற்ற வகை வைரஸ்களை விட அதிவேகமாகப் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்தவகை வைரஸ்கள் மனிதர்களுக்கு அதிக உடல் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்த வில்லை என்றும் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.

மேலும் பிரிட்டனில் இந்தப் புதுவகை வைரஸ்களினால் ஏற்பட்ட பாதிப்பு எண்ணிக்கை கடந்த வாரம் 10-15% ஆக இருந்தது. ஆனால் தற்போது 60% க்கும் அதிகமாக பரவி வருகிறது என லண்டன் கிங்ஸ் மருத்துவமனை தகவல் வெளியிட்டு உள்ளது. இதனால் அந்நாட்டில் தற்போது வழங்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளின் திறன் குறைந்து போகுமா என்ற சந்தேகமும் விஞ்ஞானிகளிடையே ஏற்பட்டு உள்ளது.

இதேபோல தென் ஆப்பிரிக்காவில் 501.V2 எனும் கொரோனாவின் புதுவகை வைரஸ் மாதிரி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த வகை வைரஸ்கள் இளைஞர்களிடம் அதிகம் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்நாட்டுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு இரண்டாம் அலையை உருவாக்கலாம் என்ற அச்சமும் எழுந்து இருக்கிறது. கொரோனாவின் ஆரம்பக்கட்டத்தில் D614G புதிய வகை மாதிரி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகைதான் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பன்மடங்காக அதிகரித்தது. அதேபோல தற்போது பிரிட்டனில் பரவி வரும் கொரோனா வைரஸ் மாதிரியும் உலகில் புது சிக்கலை உருவாக்குமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. ‘

இந்நிலையில் பிரிட்டனில் பரவிவரும் புதுவகை கொரோனா வைரஸ் மாதிரிகளை குறித்து ஆலோசனை செய்ய இந்திய சுகாதார அமைச்சகம் நேற்று கூட்டு கண்காணிப்புக் குழு உயர்மட்டக் கூட்டத்தை நடத்தியது. அதில் பேசிய எய்ம்ஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ராஜேஷ் மல்ஹோத்ரா இந்தியாவில் இதுவரை 4 ஆயிரம் கொரோனா வைரஸ் மாதிரிகளின் பிறழ்வு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் தற்போது இந்தியாவில் அதிகரித்து இருக்கும் கொரோனா எண்ணிக்கைக்கு பிரிட்டனில் பரவி வரும் கொரோனா மாதிரிகள் காரணமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டு உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.