வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பி, சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டவர் திடீர் மரணம்: அதிர்ச்சி தகவல் 

வெளி நாட்டிலிருந்து தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களுக்கு வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்ற விதி உள்ளது. இதன்படி மலேசியாவில் இருந்து சமீபத்தில் 61 வயது முகமது ஷாரிப் என்பவர் சென்னைக்கு வந்துள்ளார். அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகள் தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னரே அவர் உயிர் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது

இந்த தகவல் மற்ற தனிமைப்படுத்தப்பட்டவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்து, தனிமைப்படுத்துதல் காலம் முடிந்தவுடன் குடும்பத்தை பார்க்கலாம் என்று ஆசை ஆசையுடன் காத்திருந்தவர் திடீரென உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இதுபோன்ற தனிமைப்படுத்துதல் இடங்களில் அவசரத்திற்காக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது