'எதற்கும் துணிந்தவன்' படக்குழு மீது போலீஸ் புகார்: என்ன காரணம்?

சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது. இந்த படத்திற்கு பெரும்பாலான ஊடகங்கள், யூடியூப் விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்ததை அடுத்து இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திடீரென ’எதற்கும் துணிந்தவன்’ படக்குழு மீது போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகில இந்திய நேதாஜி கட்சி என்ற கட்சியின் தலைவர் ராகுல் காந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் முருக கடவுளை அவமதிக்கும் பாடல் இருப்பதாகவும் அந்த பாடலை உடனடியாக படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் டி இமான் மற்றும் பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் உள்ளதாகவும் இந்து கடவுளை அவமதிப்பவர்களுக்கு அது ஒரு பாடமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் இடம்பெற்ற ’உள்ளம் உருகுதய்யா’ என்ற முருகன் பாடல் வெளியாகி பல மாதங்கள் ஆகிய நிலையில் தற்போது படம் ரிலீஸான நேரத்தில்தான் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புகார் படத்தின் விளம்பரத்திற்கு உதவுமா? அல்லது படக்குழுவினர்களுக்கு பிரச்சனையாக மாறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.