நடிகர் பாலசரவணன் வீட்டில் கொரோனாவால் நிகழ்ந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்!

  • IndiaGlitz, [Friday,June 11 2021]

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவால் தினமும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வரும் நிலையில் திரையுலகைச் சேர்ந்த ஒருசிலரும் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் பாலசரவணன் தந்தை கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் திரை உலகினரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நடிகர் பாலசரவணன் தந்தை எஸ்ஏ ரங்கநாதன் என்பவர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மதுரை மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. மறைந்த எஸ்ஏ ரங்கநாதன் அவர்களுக்கு வயது 60 என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து திரையுலகினர் பாலசரவணன் குடும்பத்திற்கு இரங்கலும் ஆறுதலும் கூறி வருகின்றனர்.

கடந்த மே மாதம் பாலசரவணன் தங்கை கணவர் கொரோனாவால் உயிரிழந்தார் என்பதும் அவருக்கு வயது 32 மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருந்த பாலசரவணன் தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், முகக்கவசம் அணிந்து இருங்கள் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது கொரோனாவால் அவரது தந்தையும் பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.