வேலைக்காரனாய் நுழைந்து பேட்டையாய் மாறி தர்பார் நடத்தும் ரஜினி: பிரபல நடிகர் வாழ்த்து

  • IndiaGlitz, [Thursday,December 12 2019]

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளை அடுத்து பல்வேறு துறையினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இளையதிலகம் பிரபு அவர்கள் இதுகுறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

திரை உலகம் என்ற மாபெரும் கோட்டைக்குள் ஒரு சாதாரண வேலைக்காரனாக நுழைந்து, மாவீரனாக மாறி, தளபதியாக உயர்ந்து, மன்னனாகி, இன்று தமிழ் திரையுலகையே தன்னுடைய பேட்டயாக மாற்றி தர்பார் நடத்திவரும் எனது அருமை அண்ணன் ரஜினி அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

என் தந்தை சிவாஜியுடன் ரஜினி அண்ணன் அவர்கள் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ரஜினியுடன் படப்ப்பிடிப்பு நடக்கும் தினம் படப்பிடிப்பு முடித்து வீட்டுக்கு வந்தவுடன் அப்பா, ரஜினி குறித்தே பேசுவார். அந்த பையனின் கண்களில் ஒரு பவர் இருக்கிறது என்றும் ஒரு காந்தமாக விஷயம் அவரது கண்ணில் நிற்கிறது என்றும் அவர் கூறுவார். அதேபோல் ரஜினியை நான் பார்க்கச் செல்லும்போது அவர் எப்போதும் சிவாஜியை பற்றியே பேசிக் கொண்டிருப்பார். இருவருக்குமிடையே அப்படி ஒரு பாசம்.

ரஜினியைப் பற்றி புகழ்ந்து பேசுவதற்கு பல விஷயங்கள் இருக்கின்றது. ஆனால் அவரோ புகழ்ச்சிக்கு மயங்காதவர். நாம் எல்லோரும் சூப்பர் ஸ்டார் என்று அவரை தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவோம். ஆனால் அவரோ என்னை ஆளை விடுங்கள் நான் ஒரு சாதாரண ஆள் என்று அடக்கமாக கூறுவார். ரஜினிகாந்த் ஒரு பஞ்ச் லைன் கூறினால் அது தான் தமிழ்நாட்டின் ஹாட் டாக். அவர் எது பேசினாலும் அதுதான் அன்றைய தலைப்பு செய்தி. பேசாமல் இருந்தால் அதுவும் செய்தியாகும்

அப்படிப்பட்ட எனது அருமை அண்ணன் அவர்களுக்கு என்னுடைய பிறந்தநாளை தெரிவித்துக்கொள்கிறேன். நீண்ட ஆயுளோடும் அவர் வாழ்ந்து எங்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றும் திரையுலகம் மட்டுமின்றி அவர் எந்த களத்தில் இறங்கினாலும் அந்த களத்தில் அவர் வெற்றி பெறுவார் என்று ஆண்டவனையும் அப்பாவையும் வேண்டிக் கொள்கிறேன்

இவ்வாறு பிரபு அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்