நடிகர் ஸ்ரீகாந்த் ஓட்டு போடவில்லை: தேர்தல் அதிகாரி அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Tuesday,April 23 2019]

தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்றபோது வாக்காளர் பட்டியலில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி பெயர் இல்லாததால் அவர்கள் இருவரையும் வாக்களிக்க தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அதன்பின்னர் நீண்ட வாக்குவாதத்திற்கு பின்னர் ஸ்ரீகாந்தும் அவரது மனைவியும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஸ்ரீகாந்தும் வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்த பின்னர் தானும் தனது மனைவியும் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வாக்களித்ததாக பேட்டி அளித்தார். மேலும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் வாக்களித்த மையுடன் கூடிய விரல் போட்டோவையும் பதிவு செய்திருந்தார்

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பேசியபோது 'வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத ஸ்ரீகாந்த்தை வாக்களிக்க அனுமதித்தது எப்படி? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 'நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களிக்கவில்லை என்றும், தேர்தல் அதிகாரிகள் அவருடைய விரலில் மை மட்டும்தான் வைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளனர். அப்படியென்றால் ஸ்ரீகாந்த் அளித்த பேட்டி பொய்யா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது