கொரோனாவில் இருந்து மீண்ட தமிழ் நடிகை: விரைவில் மக்கள் பணிக்கு திரும்புவதாக அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,July 24 2020]

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ’தீர்ப்பு’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’முரட்டுக்காளை’, ’கழுகு’, விசுவின் ’குடும்பம் ஒரு கதம்பம்’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சுமலதா. இவர் தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா தொகுதியில் எம்பியாக உள்ளார் என்பதும் இவர் மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷ் அவர்களின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை சுமலதாவுக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சுமலதா தற்போது கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: நான் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளேன். உங்கள் அனைவரின் பிரார்த்தனையால் தான் நான் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்து உள்ளேன். இந்த 3 வார கால கட்டாய தனிமையை மன வேதனையுடன் அனுபவித்து முடித்து உள்ளேன். தற்போது எனக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் எனக்கு வைரஸ் தொற்று இல்லை என்று வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி ஒரு வாரம் வீட்டில் ஒய்வெடுக்க உள்ளேன். விரைவில் மக்கள் பணிக்கு திரும்புவேன்’ என்று தெரிவித்துள்ளார்.

கொரோனாவில் இருந்து குணமான சுமலதாவிற்கு திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.