விஜய் படங்கள் ஓடுவது இப்படித்தான்: அதிமுகவின் வைகைச்செல்வன் கருத்து
- IndiaGlitz, [Friday,September 20 2019]
நேற்று நடைபெற்ற 'பிகில்’ ஆடியோ விழாவில் சுபஸ்ரீ மரணம் குறித்து விஜய் பேசியபோது, ‘கைது செய்ய வேண்டியவரை கைது செய்யாமல் பிரிண்டிங் பிரஸ் நபரை கைது செய்ததாக கூறினார். மேலும் யாரை எங்கே வைக்க வேண்டுமோ, அவரை அங்கே வைத்தால் தான் எந்த பிரச்சனையும் இருக்காது’ என்றும் அவர் கூறினார். விஜய்யின் இந்த பேச்சுக்கு ஆளும் அதிமுக தரப்பில் இருந்து விமர்சனம் வரும் என்று நேற்றே எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் எதிர்பார்த்ததுபோல் இன்று அதிமுகவின் வைகைச்செல்வன் இதுகுறித்து கூறுகையில், ‘இப்போதெல்லாம் திரைப்படங்கள் 20 நாளுக்கு மேல் ஓடுவதே சிரமமாக உள்ளது. திரைப்படங்களை பரபரப்புக்கு உள்ளாக்க அரசியல் தேவைப்படுகிறது. ஒருகாலத்தில் கதையை நம்பி படம் எடுத்ததால் நீண்ட காலம் படம் ஓடியது. ஓராண்டுவரையெல்லாம் ஓடிய வரலாறு உண்டு. ஆனால் இப்போது அப்படி இல்லை. கதையே இல்லாத படத்தை எடுத்துவிட்டு 2 மாத காலத்திற்கு ஓட்டுவதற்குதான் இதுபோன்ற விழாக்களில், அரசியல் பேசப்படுகிறது.
இப்படி பரபரப்புக்கு உள்ளாக்கி, படத்தை ஓட வைப்பதில் பல நடிகர்கள் இருக்கிறார்கள். அதில் நடிகர் விஜய்யும் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார். இப்படித்தான் சமீபகாலமாக அவரது படங்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது. அதேபோல் யாரை எங்கே வைக்க வேண்டுமோ, அங்கே தான் வைக்க வேண்டும் என்று விஜய் குறிப்பிட்டுள்ளார். யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே தான் அவர்களை தமிழக மக்கள் வைத்துள்ளார்கள்’ என்று கூறியுள்ளார். மொத்தத்தில் ‘மெர்சல்’, ‘சர்கார்’ படம் போலவே ‘பிகில்’ படத்திற்கும் இலவச விளம்பரம் தொடங்கிவிட்டதாக கருதப்படுகிறது.