close
Choose your channels

5 நிமிடம் ஆக்சிஜன் சப்ளையை நிறுத்திய மருத்துவமனை… 22 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்!

Friday, June 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி அன்று ஒரு தனியார் மருத்துவமனை முன்பு பொதுமக்கள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காரணம் தீவிரச் சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகளின் ஆக்சிஜன் சப்ளையை அந்த மருத்துவமனை நிர்வாகம் கிட்டத்தட்ட 5 நிமிடத்திற்கு நிறுத்தி வைத்ததாகவும் இதனால் 22 பேர் உயிரிழந்து விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் பராஸ் எனும் அந்த மருத்துவமனை நிர்வாகம் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதால் எந்த நோயாளிகளும் உயிரிழக்கவில்லை. கடந்த ஏப்ரல் 26-27 ஆம் தேதிகளில் வெறும் 7 நோயாளிகள் மட்டுமே உயிரிழந்து உள்ளனர். இந்த உயரிழப்புக்கு ஆக்சிஜன் சப்ளை ஒரு காரணமாக அமையவில்லை எனத் தெரிவித்து உள்ளனர்.

மருத்துவமனை நிர்வாகம் அளித்த இந்த விளக்கத்தை தற்போது ஆக்ராவின் மாஜித்ரேட்டும் ஒப்புக் கொண்டுள்ளர். ஆனால் இந்த விவகாரத்தைக் குறித்து ஆக்ராவில் செயல்பட்டு வரும் பல சமூகநல அமைப்புகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகின்றனர். அதோடு ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தியதால்தான் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி பராஸ் மருத்துவமனையில் 22 பேர் உயிரிழந்து உள்ளனர். இதை பராஸ் மருத்துவமனை மறைக்கிறது. அதோடு மருத்துவமனை நிர்வாகத்திற்கு அரசாங்கமும் துணை போகிறது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து ஆக்ராவில் தற்போது போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதனால் கடந்த செவ்வாய்கிழமை அன்று பராஸ் மருத்துவமனைக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையே இல்லை எனக் கூறி வந்த உத்திரப்பிரதேசத்தில் இப்படியொரு சம்பவம் நடந்து இருப்பது குறித்து பலரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர். மேலும் இந்தியத் தண்டனை சட்டம் 302 கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களுக்கு தக்கத் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் எனப் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.