விவாகரத்தால் ஏற்பட்ட மனவலி அதிகம்: அமலாபால்

  • IndiaGlitz, [Saturday,August 12 2017]

தனுஷுடன் அமலாபால் நடித்த 'விஐபி 2' திரைப்படம் நேற்று வெளியாகி அபாரமான முதல் நாள் ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளது. நீண்ட விடுமுறை உள்ளதால் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

இந்த நிலையில் IndiaGlitzக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், 'விஐபி 2' படத்தில் ஏற்பட்ட அனுபவம், செளந்தர்யாவுடன் பணிபுரிந்தபோது கிடைத்த திருப்தி ஆகியவற்றை பகிர்ந்து கொண்டார். மேலும் தனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட மனவலி, விஜய்யுடன் ஏற்பட்ட விவாகரத்து ஆகியவை குறித்தும் மனம் திறந்து பேசினார்.

விஜய்யுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மோசமானதாக இல்லை என்றாலும் மகிழ்ச்சியை தரவில்லை. இந்த மணமுறிவு தனக்கு மனவலியை தந்தது, ஆனால் அதே நேரத்தில் எனக்கு அனுபவத்தையும் கற்று கொடுத்தது. எனது திருமண வாழ்க்கை சந்தோஷம் இல்லாதது என்று கூற மாட்டேன். அதே நேரத்தில் மென்மையான மகிழ்ச்சியான வாழ்க்கை என்றும் கூறமுடியாது. எனது மணவாழ்க்கையில் அதிக மனவலியை தரும் சம்பவங்கள் நடந்தது. மேலும் மணமுறிவால் ஏற்பட்ட மனவலியைவிட நாங்கள் இருவரும் சினிமா பிரபலம் என்பதால் பலதரப்பட்ட கட்டுக்கதைகள் ஏற்படுத்திய மனவலி அதிகம்.

எனது மண வாழ்க்கையில் வாழ்க்கை என்பது எப்போதுமே சந்தோஷமாக செல்வது இல்லை என்பதை புரிந்து கொண்டேன். நம்மை மீறி சில விஷயங்கள் நடக்கத்தான் செய்யும். எனவே விவாகரத்து என்பதை நான் என்னுடைய எதிர்கால நன்மையை கருதி எடுத்த சரியான முடிவாகவே கருதுகிறேன்.

23 வயதில் திருமணம் என்ற முடிவை நான் அவசரப்பட்டு எடுத்தேனா என்பது எனக்கு தெரியவில்லை. வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களுக்கும் ஒரு காரணம் இருக்கும். இருப்பினும் இன்னும் கொஞ்சம் பக்குவப்பட்ட பின்னர் திருமணம் செய்திருக்கலாம் என்பதை தற்போது எண்ணுகிறேன்.

மேலும் மறுதிருமணம் குறித்து அமலாபால் கூறியபோது, 'கண்டிப்பாக ஒருநாள் அது நடக்கும். ஆனால் அதற்கு நான் தயாராக சில காலம் ஆகலாம். தற்போது நான் என்னுடைய தொழிலில் முழு கவனம் செலுத்தி வருகிறேன். அதுமட்டுமின்றி மேலும் சில சுவாரஸ்யமான திட்டங்கள் வைத்திருக்கின்றேன். நடக்கும்போது எல்லாம் நல்லபடியாக நடக்கும்' என்று கூறினார்.