1 ரூபாயை பெற்றுக்கொண்டு ஆக்சிஜன் சிலிண்டரை நிரப்பிக் கொடுக்கும் நல்ல உள்ளம்!

  • IndiaGlitz, [Saturday,April 24 2021]

கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டரை 1 ரூபாயைப் பெற்றுக்கொண்டு உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நபர் நிரப்பிக் கொடுத்து வருகிறார். அதிலும் இவர் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான சிலிண்டர்களை இப்படி நிரப்பிக் கொடுத்து வருவது தற்போது ஊடகங்கள் மத்தியில் பெரிதும் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

கொரோனா நோய்த்தொற்று இந்தியா முழுக்கவே தற்போது பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் கடந்த சில தினங்களாக உத்திரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பெங்களூர், டெல்லி போன்ற பகுதிகளில் மருத்துவமனை முழுக்க நிரம்பி வழிவதாகவும் இதனால் கொரோனா நோயாளிகளை ஆட்டோக்களிலும் ஆம்புலன்களிலும் தெருக்களிலும் வைத்து சிகிச்சை அளித்து வரும் அவலமும் நீடித்து வருகிறது.

இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட தங்களது உறவினர்களைக் காப்பாற்றும் பொருட்டு ஒவ்வொருவரும் கள்ளச் சந்தையிலாவது ஆக்சிஜனை வாங்கி விட வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் மும்பையில் மட்டும் தற்போது ரூ.30 ஆயிரத்திற்கு ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இதுபோன்ற நெருக்கடியான நிலைமைகளில் சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் மட்டுமே கொரோனா நோயாளிகளுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். உத்திரப்பிரதேச மாநிலம் ஹமிஸ்பூர் அடுத்த ரிம்ஜிம் இஸ்பாட் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் குப்தா. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் ஆக்சிஜனுக்காக அவதிப்பட்டதாகத் தெரிவித்து உள்ளார். இதனால் ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் தற்போது ரூ.1 ஐ பெற்றுக்கொண்டு பல ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளிகளுக்கு உதவி வருகிறார்.

இதைத்தவிர மும்பையைச் சேர்ந்த ஷாநாவாஸ் எனும் இளைஞர் தனது சொகுசு காரை விற்று கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக ஆக்சிஜன் சிலிண்டரை சப்ளை செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.