பார்த்திபன் படத்திற்காக பாடல்கள்: ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய புதிய தகவல்!

இயக்குனர் பார்த்திபன் படத்திற்கு பாடல்கள் கம்போஸ் செய்வது குறித்த புதிய தகவல்களை ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் தெரிவித்துள்ளார்

சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடல் ஒன்றை பாடிய பாடகியிடம் தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். இந்த பாடலை மணிரத்னம் அவர்கள் படத்திற்காக கம்போஸ் செய்தேன் என்றும் இது போன்ற பாடல்கள் கம்போஸ் செய்வது மிகவும் அரிது என்றும் ஏனெனில் இதுபோன்ற மெலடி பாடல்கள் கம்போஸ் செய்வதற்கான காட்சிகள் வெகு அரிதாகவே தனக்கு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்

இருப்பினும் இது போன்ற பாடல்களை அதிகமாக கம்போஸ் செய்ய வேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாகவும் கூறிய ஏ.ஆர்.ரஹ்மான், பார்த்திபனின் ’இரவின் நிழல் என்ற படத்திற்காக இதே போன்ற ஒரு பாடலை கம்போஸ் செய்திருப்பதாகவும் அவர் அந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் பார்த்திபன் படத்திற்காக 3 பாடல்கள் கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும் ஒரு புரோமோஷனல் பாடலும் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்

பார்த்திபன் இயக்கி வரும் ‘இரவில் நிழல்’ என்ற படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் ஏற்கனவே உலக அளவில் ஒரு சில படங்கள் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருந்தாலும் இதுபோன்ற ஒரு படம் இதுவரை உலகில் வந்து இருக்காது என்பதை படம் பார்க்கும்போது ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.