ஜீத்துஜோசப்பின் அடுத்த படத்தில் அருள்நிதி?

  • IndiaGlitz, [Sunday,August 16 2015]

பிரபல மலையாள இயக்குனர் ஜீத்துசோசப் இயக்கிய மலையாள திரைப்படம் 'த்ரிஷ்யம்' அவரது இயக்கத்திலேயே தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக் ஆகியது என்பது அனைவரும் அறிந்ததே. கமல்ஹாசன், கவுதமியின் அற்புதமான நடிப்பில் வெளியான இந்த படம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில் ஜீத்து ஜோசப்பின் மற்றொரு மலையாளப் படம் தற்போது ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு ஜீத்துஜோசப் இயக்கத்தில் வெளியான மலையாள திரைப்படம் 'மெமொரிஸ் (Memories). பிரித்விராஜ், மியா ஜார்ஜ், மேக்னா ராஜ், நெடுமுடி வேணு மற்றும் பலர் நடித்திருந்த இந்த படம் கேரளாவில் நல்ல வெற்றியை பெற்றது. தற்போது இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யவும், பிரித்விராஜ் நடித்த முக்கிய வேடத்தில் அருள்நிதி நடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அருள்நிதியின் முந்தைய படத்தை இயக்கிய 'அறிவழகன்' இந்த படத்தை இயக்கவுள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் அருள்நிதியின் 'டிமாண்டி காலனி' படத்தை தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபரில் தொடங்கும் என்றும் அடுத்த வருடம் பிப்ரவரியில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.