விவேக் சாருக்கு கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றுவேன்: ஆர்யா

  • IndiaGlitz, [Friday,October 15 2021]

விவேக் அவர்களுக்கு கொடுத்த சத்தியத்தை நான் நிறைவேற்றுவேன் என நடிகர் ஆர்யா இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியுள்ளார்.

நடிகர் ஆர்யா நடித்த ’அரண்மனை 3’ திரைப்படம் நேற்று பிரம்மாண்டமாக வெளியாகியிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்த படத்தில் மறைந்த நடிகர் விவேக் அவர்களும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை நடிகர் ஆர்யா சந்தித்தபோது, ‘விவேக் அவர்களுக்கு நான் கடந்த ஆண்டு ஒரு சத்தியம் செய்து கொடுத்தேன். அப்துல் கலாம் பிறந்த நாளன்று நான் செடிகள் நடுவேன், அன்றைய தினம் நீ வரவேண்டும் என்று விவேக் கூறி இருந்தார். நான் கண்டிப்பாக வருவேன் என்று அவருக்கு வாக்குறுதி கொடுத்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் இன்று நம்மிடையே இல்லை.

எனவே அவருக்கு கொடுத்த வாக்குறுதியின்படி நான் இன்று செடிகள் நடுவதற்காக வந்திருக்கின்றேன். ஒவ்வொரு ஆண்டும் என்னால் முடிந்த அளவு அவர் செய்ததை நானும் செய்ய நினைக்கிறேன். என்னுடைய நண்பர்கள் மற்றும் என்னுடன் இருப்பவர்களிடம் இதனை நான் ஒரு வேண்டுகோளாக விடுத்து இருக்கிறேன். என்னால் முடிந்த அளவு கண்டிப்பாக விவேக் சார் அவர்களுக்காவும் அப்துல் கலாம் சார் அவர்களுக்காவும் நான் இதைச் செய்வேன் என்று ஆர்யா கூறியுள்ளார்.