அயோத்தி வழக்கு: தீர்ப்பின் முதல்கட்ட விபரங்கள்

  • IndiaGlitz, [Saturday,November 09 2019]

அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த தீர்ப்பில் முதலில் 5 நீதிபதிகள் கையெழுத்திட்டனர். இந்த தீர்ப்பை 5 நீதிபதிகளும் ஏகமனதாக ஏற்று தீர்ப்பு அளிக்கின்றனர். இந்த தீர்ப்பின் முதல்கட்ட சாரம்சம் வருமாறு:

பாபர் மசூதி வழக்கில் ஷியா மற்றும் வக்பு வாரிய அமைப்புகளின் மனுக்கள் தள்ளுபடி. அதேபோல் நிர்மோகி அகாராவின் கோரிக்கை தனிப்பட்டதாக இருப்பதால் அந்த மனுவும் தள்ளுபடி

மதம் அரசியலுக்கு அப்பாற்பட்டு தீர்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதும் நாட்டில் ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மற்றொரு பிரிவினர் தொந்தரவு செய்யக்கூடாது என்பதும் உச்சநீதிமன்றத்தின் கோரிக்கை. அரசியல் சாசனத்தின் அடிப்படையிலேயே நீதிமன்றங்கள் செயல்படும்

அயோத்தியில் பாபரால் மசூதி கட்டப்பட்டதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. மசூதிக்கு கீழ் இருந்தது எந்த வழிபாட்டுத்தலம் என தொல்லியல்துறை சொல்லவில்லை. தொல்லியல் துறை ஆதாரங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை. கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக தொல்லியல் துறை சொல்லவில்லை.

பாபர் மசூதிக்கு கீழே கண்டறியப்பட்ட கட்டுமானங்கள் இஸ்லாமியர்களின் கட்டுமானங்கள் அல்ல. எனவே காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

சர்ச்சைக்குரிய இடத்தில் 1949ல் ராமர் சிலை வைக்கப்பட்டது. அயோத்தி தான் ராமர் பிறந்த இடம் என்பதை இந்துக்கள் நம்புகிறார்கள். அவ்வாறு இந்துக்கள் நம்புவதை மறுக்க முடியாது. மதங்களில் இருக்கும் நம்பிக்கையை உச்சநீதிமன்றம் மதிக்கின்றது.

ஆவணங்களின்படி சர்ச்சைக்குரிய இடம் அரசுக்கு சொந்தமானது. அந்த இடத்தை பாபர் மசூதி என இஸ்லாமியர்கள் அழைக்கிறார்கள்.

தற்போது வரை வெளிவந்துள்ள தீர்ப்பின் சாரம்சம் இதுதான். தீர்ப்பின் முழு விபரம் வெளிவர அரைமணி நேரம் ஆகும் என்பதால் தீர்ப்பின் முழு அம்சங்களை இன்னும் சில நிமிடங்களில் பார்ப்போம்