என்னோட கேரியரே போச்சு: பிக்பாஸ் தமிழ் பிரபலம் 

  • IndiaGlitz, [Saturday,January 16 2021]

கடந்த நூறு நாட்களுக்கு மேல் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நாளையுடன் முடிவடையும் நிலையில் நாளை இந்த போட்டியின் வெற்றியாளர்கள் யார் என்பது தெரியவரும். ஆரி, பாலாஜி, ரம்யா,கேபி சோம் மற்றும் ரியோ ஆகிய ஆறு போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் ரூபாய் ஐந்து லட்சத்தை பெற்றுக்கொண்டு கேபி வெளியேறியதால் தற்போது இருக்கும் ஐந்து போட்டியாளர்களில் யார் வெற்றியாளர் என்பதை நாளை கமல்ஹாசன் முறைப்படி அறிவிப்பார்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் பல்வேறு விதமான அனுபவங்கள் ஏற்பட்டு உள்ளது என்பதும் ஒரு சிலருக்கு அவர்களே எதிர்பார்க்காத அளவில் மிகப் பெரிய புகழ் உச்சத்தை அடைந்து இருக்கிறார்கள் என்பதும் ஒரு சிலருக்கு தாங்கள் ஏற்கனவே காப்பாற்றி வந்த புகழ் மக்களால் கேலி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் தற்போது கசிந்துள்ள வீடியோ ஒன்றின் மூலம் ரேகா, ரம்யா, அர்ச்சனா, சம்யுக்தா உள்ளிட்டவர்கள் தங்களுடைய அனுபவங்களை பிக்பாஸ் வீட்டில் பகிர்ந்து வருகின்றனர். அப்போது சம்யுக்தா ’எல்லாருக்கும் வேற மாதிரி அனுபவங்கள் கிடைத்தது’ என்று கூறினார். அப்போது ரம்யாவை பார்த்து ரேகா, ‘நான் உன்னை சிங்கப்பெண் என்று வந்தவுடனே கூறினேன், உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என்று கூறினார். அப்போது ’எனக்கு மட்டும் தான் கேரியரே போச்சு’ என்று அர்ச்சனா சோகமாக கூறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா விளையாடியவிதம் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது என்பது அவர் வெளியே சென்றதும் தெரிந்ததால் தான் அவர் இவ்வாறு பேசியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் அர்ச்சனா ஜீ டிவியில் மிகச் சிறப்பான வகையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதை யாரும் மறந்திருக்க முடியாது. அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இன்னும் உள்ளது. ரஜினிகாந்த் பேட்டி உள்பட அவர் தொகுத்து வழங்கிய பல நிகழ்ச்சிகள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட ஒரு சில நாட்களில் மக்களின் அதிருப்தியை அவர் சம்பாதித்து இருந்தாலும், அவருடைய கேரியரில் போய்விட்டது என்பதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மீண்டும் சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் மக்கள் அவரை ரசிக்க தயாராக உள்ளனர் என்பதுதான் உண்மை