மக்கள் தீர்ப்பு தவறு, பிக்பாஸையே எகிறிய வனிதா!

பிக்பாஸ் வீட்டில் நேற்று சேரன் வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தவுடன் போட்டியாளர்களில் அதிக அதிர்ச்சி அடைந்தவர் வனிதா தான். இது ரொம்ப தவறாக இருப்பதாகவும், மக்கள் தீர்ப்பு தவறு என்றும், மக்கள் தீர்ப்பே தவறாக இருந்தால் இந்த விளையாட்டை நாம் ஏன் விளையாட வேண்டும் என்றும் ஆத்திரத்துடன் மக்களை விமர்சனம் செய்தார். ஏற்கனவே வனிதா பேசும்போதெல்லாம் கைதட்டி அவரை பேசவிடாமல் ஆடியன்ஸ் செய்வதால் மக்கள் மீது கோபத்தில் இருக்கும் வனிதா, அந்த கோபத்தை நேற்று வெளிப்படுத்தினார்.

இந்த விளையாட்டு எதை நோக்கி போகிறது என்று கேள்வி எழுப்பிய வனிதா, ‘இந்த கேம் மீதான நம்பிக்கை எனக்கு சுத்தமாக போய்விட்டது என்றும், எந்த விதத்தில் ஓட்டு போடுகின்றார்கள்? ஒருவர் நியாயமாக இருந்து, டாஸ்க் எல்லாம் சரியாக செய்து, உண்மையாக இருந்தால் அவர் வெளியேற்றப்படுவாரா? என்றும் வனிதா கேள்வி எழுப்பினார். மேலும் இந்த மாதிரி ஓட்டு போடும் மக்களிடம் தான் விளையாட தயாராக இல்லை என்றும் தயவுசெய்து எங்க எல்லாரையும் வெளியே அனுப்பிவிடுங்கள் என்றும் வனிதா ஆதங்கம் அடைந்தார்.

இருப்பினும் நீங்கள் வெளியே போய் உங்கள் குடும்பத்தினர்களை பாருங்கள், உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறிய வனிதா ஒரு கட்டத்தில் உடைந்து அழுதார். கவின், சாண்டி ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த நட்பு காரணமாக அழுதபோது ‘இது கேம், அழுவதற்கு ஒன்றும் இல்லை’ என்று சுட்டிக்காட்டிய வனிதா இன்று அழுவது முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேற்றப்படுவது விதி என்ற வகையில் இன்று சேரன் வெளியேறும்போது மட்டும் வனிதா அழுவது அவரது கேரக்டரை கேள்விக்குறியாக்குவதாக தெரிகிறது.

மேலும் கேமிரா முன் பேசிய வனிதா, நம்மகிட்ட ஒரு மாதிரி பேசுறாங்க, கமல் சார் முன்னாடி ஒரு மாதிரி பேசுறாங்க, மக்கள் கைதட்டினா அதற்கு ஏற்ற மாதிரி மாறிவிட்றாங்க, கமல் சார் சொன்னார்ன்னா, உடனே அதுக்கு தகுந்த மாதிரி மறுநாளில் இருந்து மாறிவிடுகிறார்கள், இந்த மாதிரி போட்டியாளர்கள் தான் வேண்டும் என்றால் என்னை எதற்கு மீண்டும் கூட்டிட்டு வந்தீங்க, கூப்பிட்டு வச்சு காமெடி பண்றதுக்கா? என்று பிக்பாஸையும் வனிதா எகிறினார்.