700 கி.மீ தூரம் பயணம்செய்து நீட் எழுத வந்த மாணவனுக்கு அனுமதி இல்ல… காரணத்தை கேட்டா நீங்களே டென்ஷன் ஆவீங்க…

  • IndiaGlitz, [Wednesday,September 16 2020]

 

கொரோனா தாக்கத்தால் மனிதனது இயல்பு வாழ்க்கையே தலைகீழாக மாறியிருக்கிறது. இந்நெருக்கடிக்கு மத்தியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்வை தள்ளி வைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டது. ஆனால் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டு தேர்வு நடந்து முடிந்து விட்டது.

இந்நிலையில் கொரோனா நெருக்கடிக்குள் மத்தியில் பல சிரமங்களை சந்தித்து மாணவர்கள் இந்த தேர்வை எழுதியது குறித்த தகவல்களும் ஊடகங்களில் வெளியானது. குறிப்பாக போக்குவரத்து வசதிகள் இல்லாமல் மாணவர்கள் சிரமப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதைப்போல ஒரு சம்பவம் பீகார் மாநிலத்தில் நடைபெற்று இருக்கிறது.

பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா மாவட்டத்தில் சந்தோஷ்குமார் யாதவ் (19) என்ற மாணவர் நீட் தேர்வுக்கு தன்னை தயார் செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் பகுதியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. பீகாரில் இருந்து செல்ல சனிக்கிழமை காலையே தனது பயணத்தைத் தொடங்கி இருக்கிறார் சந்தோஷ். வழியில் முஸாப்பூர்-பாட்னா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அதிலேயே 6 மணிநேரம் வீணாகியதாக சந்தோஷ் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதனால் பாட்னாவிற்கு சனிக்கிழமை இரவு 9 மணிக்கு வந்தப்பின் உடனே கொல்கத்தாவிற்கு விரைந்து இருக்கிறார். கொல்கத்தாவிற்கு ஞாயிறு மதியம் 1 மணிக்கு வந்து சேர்ந்து இருக்கிறார். ஏற்கனவே நேரம் ஆனதால் ஒரு டாக்சியைப் பிடித்து தேர்வு மையத்திற்கு 1.40 மணிக்கு வந்து சேர்ந்து இருக்கிறார். ஆனால் தேர்வு எழுத அவருக்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர். காரணம் நீட் தேர்வு 2 மணிக்கு தொடங்க இருந்தாலும் 1.30 மணிக்கே தேர்வு அறைக்குள் நுழைந்துவிடவேண்டும் என்று விதிமுறையில் கூறப்பட்டு இருக்கிறது.

ஆனால் சந்தோஷ் 10 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் எப்படியாவது ஒரு வாய்ப்பு கிடைத்து விடாதா என்ற ஆசையில் சந்தோஷ் அக்கல்லூரியின் முதல்வர் முதற்கொண்டு அங்கிருந்த அனைத்து அதிகாரிகளிடமும் அனுமதி கேட்டு இருக்கிறார். ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர். இதனால் கல்லூரி வசாலிலேயே சோர்ந்து போய் நின்றிருக்கிறார் சந்தோஷ்.

தற்போது இந்தத் தகவல் சமூக வலைத்தளத்தில் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 700 கிலோ மீட்டர் தொலைவு, கிட்டத்தட்ட ஒன்றரை நாள் பயணம் செய்து தேர்வு எழுத வந்த 19 வயத மாணவரை 10 நிமிட தாமத்திற்காக அனுமதி மறுத்த சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.