close
Choose your channels

இந்தியாவில் அச்சுறுத்தலாக மாறிவரும் புதிய தொற்றுநோய்… மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமா???

Tuesday, January 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவில் அச்சுறுத்தலாக மாறிவரும் புதிய தொற்றுநோய்… மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமா???

 

கொரோனாவிற்கு நடுவில் இந்தியாவில் புதிய தொற்று நோய் ஒன்று அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சலப்பிரதேசம், கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் புதிய தொற்று குறித்த பாதுகாப்பு அறிவிப்பை மாநில அரசாங்கள் ஏற்படுத்தி வருகின்றன. ‘

முதலில் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி முதல் ஜனவரி 3 ஆம் தேதிவரை மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் 142 காகங்கள் உயிரிழந்தன. இதற்கு காரணம் H5N8 எனப்படும் ஒருவகை பறவைக் காய்ச்சல் நோய் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா எனப்படும் இப்புதிய தொற்றுநோய் மனிதர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இதுவரை இந்தப் புதிய தொற்று நோயால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்ற சுகாதாரத்துறை கூறி உள்ளது.

மத்தியப் பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தான், இமாச்சலப்பிரதேசம், கேரளாவிலும் இப்புதிய தொற்று நோய் பாதிப்பு இருப்பதை அம்மாநில அரசாங்கள் தற்போது உறுதிப்படுத்தி இருக்கின்றன. ஆனால் இந்த இடங்களில் மனிதர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் மற்ற பறவை இனங்களுக்கும் இப்புதிய தொற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று சுகாதாரத்துறை தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இமாச்சல் பிரதேசத்தில் 2500 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இப்புதிய தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதேபோல ராஜஸ்தானின் ஜலவர் பகுதியில் கடந்த வாரம் 250 க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்தன. இந்த உயிரிப்புக்கும் H5N8 தொற்றே காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அடுத்து மத்தியப் பிரதேசத்தின் அகார் மால்வா, மாண்ட்சூர், கார்கோன் மற்றும் டேலி போன்ற இடங்களில் காகம் மற்றும் மயில் இனங்கள் இப்புதிய தொற்று நோயால் இறந்துள்ளன.

மேலும் அம்மாநிலத்தின் இந்தூரில் மட்டும் 250 க்கும் மேற்பட்ட காகங்கள் இப்புதிய நோயால் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயத்தில் தற்போது வாத்து மற்றும் கோழிகள் திடீரென கொத்து கொத்தாக செத்து மடிந்துள்ளன. இதன் மாதிரிகள் சோதிக்கப்பட்டபோது H5N8 வைரஸ் காரணம் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த இருமாவட்டங்களிலும் H5N8 வைரஸ் பாதிப்பினால் இதுவரை 12 ஆயிரம் வாத்து மற்றும் கோழிகள் உயிரிழந்ததாக அம்மாநில அரசு உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக 36 ஆயிரம் வாத்து மற்றும் கோழிகள் கொல்லப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் குளோரின் டை-ஆக்ஸைடு தெளிக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும் கேரளாவில் இருந்து கோழி, வாத்து போன்ற இறைச்சிக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கேரளாவின் பல்வேறு இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தி விட்ட H5N8 வைரஸ் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வில்லை என்றே கேரளா சுகாதாரத்துறை குறிப்பிட்டு உள்ளது. இந்நிலையில் இமாச்சல், கேரளா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானை அடுத்து மற்ற மாநிலங்களுக்கும் இப்புதிய தொற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துமா அல்லது மனிதர்களுக்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடுமா என்ற அச்சமும் ஏற்பட்டு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.