பாஜகவின் வெற்றி தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல: கமல்ஹாசன் பேட்டி

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் சென்னையின் மூன்று தொகுதிகள் உள்பட மொத்தம் ஐந்து தொகுதிகளில் தலா ஒரு லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. அதேபோல் தமிழகத்தின் பல தொகுதிகளில் நல்ல வாக்கு சதவிகிதத்தையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூறியதாவது: பாஜகவின் வெற்றி தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல. கடந்த 14 மாதத்தில் எங்களால் என்ன முடியுமோ, அதை செய்துள்ளோம்.

தேர்தல் தோல்வியால் எங்களுக்கு ஏமாற்றம் இல்லை. பணப் புயலுக்கு நடுவில் இந்த இலக்கை தொட்டதே சாதனை தான், நேர்மைக்கு நாங்கள் தான் ஏ டீம். எதிர்ப்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை மக்கள் எங்களுக்கு அளித்துள்ளனர், வாக்களித்த மக்களுக்கு நன்றி.

தமிழகத்தின் எழுச்சி தான் எங்கள் இலக்கு. மக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், தொடர்ந்து செயலாற்றுவோம், நல்ல வழியில் தான் நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

மேலும் தலைவர்கள் மரணத்தால் அரசியலில் ஒருபோதும் வெற்றிடம் உருவாகாது என்றும் வெற்றிடம் உருவாக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் வழக்கம்போல் ரஜினியை மறைமுகமாக தாக்கி தனது பேட்டியை முடித்து கொண்டார்.