2வது மாடியில் கேட்பாரற்று 3 நாட்கள் கிடந்த தாயின் பிணம்: 4வது மாடியில் குடியிருந்த மகன் மீது வழக்கு

80 வயது தாயின் பிணம் மூன்று நாட்கள் கேட்பாரற்று இரண்டாவது மாடியில் இருந்த நிலையில், அதே அபார்ட்மெண்டில் நான்காவது மாடியில் குடியிருந்த அவரது மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியை சேர்ந்த ஒரு அப்பார்ட்மெண்டில் இரண்டாவது மாடியில் தனியாக தாயும், நான்காவது மாடியில் அவரது மகன் குடும்பத்துடனும் வசித்து வந்தார்கள். இந்த நிலையில் இரண்டாவது மாடியிலிருந்த தாய் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நான்காவது மாடியில் இருந்த மகனிடம் கூறினார்கள். இதனை அடுத்து அவர் இரண்டாவது மாடியில் உள்ள தன்னுடைய தாயின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்து, அவரது பிணம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து காவல்துறையினர் விரைந்து வந்து தாயின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர்களின் முதல்கட்ட விசாரணையில் 80 வயது பெண் இறந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. தாயின் பிணம் இரண்டாவது மாடியில் இருந்த போதும் நான்காவது மாடியில் இருந்த அவரது மகன் மூன்று நாட்களாக அவரைக் கவனிக்காமல் இருந்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து டெல்லி மகளிர் நல ஆணையம் காவல்துறையினர்களிடம் மகன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது மிகவும் சீரியசான விஷயம் என்றும், பெற்றோரை சரியாக கவனிக்காத பிரிவின்கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்த மகன், ‘தான் தன்னுடைய சகோதரி வீட்டிற்கு சென்றதாகவும் அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருந்ததால் தனது தாயின் மரணம் தெரியாமல் போய் விட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார் இருப்பினும் அவர் கூறியது உண்மைதானா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.