முத்தரப்பு பேச்சுவார்த்தை திடீர் ஒத்திவைப்பு. பஸ் ஸ்டிரைக் தொடருமா?
- IndiaGlitz, [Monday,May 15 2017]
ஊதிய உயர்வு, ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் பெரும்பாலான அரசு பேருந்துகள் சென்னை உள்பட தமிழகம் முழுக்க ஓடவில்லை
தனியார் பேருந்துகள், ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஆகியவை ஓடினாலும் அதில் திடீர் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் இன்று சிஐடியூ, தொமுச, அரசு தரப்பு என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் ஸ்டிரைக் வாபஸ் ஆகும் என்று எதிர்பார்த்த நிலையில் அரசு தரப்பில் இருந்து யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் பேச்சுவார்த்தை திடீரென ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்டிரைக் தொடரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலைநிறுத்தம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சற்று முன்னர் ஆலோசனை செய்தார். அதுமட்டுமின்றி அனைத்து அமைச்சர்களும் அவரவர் தொகுதிக்கு சென்று நேரடியாக போக்குவரத்தை கண்காணிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் சென்னையில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக கூடுதலாக மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி சென்னை மெட்ரோ ரயில்களில் இன்று முதல் ஒருவாரத்திற்கு 40 சதவீத கட்டணச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை மக்கள் ஓரளவிற்கு ஸ்டிரைக் பாதிப்பில் இருந்து தப்பித்துள்ளனர்.