இந்தியாவில் இடம் மாறுகிறதா டிக்டாக் அலுவலகம்?

இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்கள் இடையே சமீபத்தில் லடாக் எல்லையில் நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலை அடுத்து சீனாவுடனான உறவை துண்டித்துக் கொள்ளும் வகையில் சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. அதில் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட டிக் டாக் செயலியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை அடுத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகள் டிக்டாக் செயலியை பாதுகாப்பு காரணத்திற்காக தடை செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தியா தடை விதித்ததால் சுமார் 45,000 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்த டிக்டாக் நிறுவனம் மற்ற நாடுகளும் தடை விதித்தால் இழுத்து மூடும் நிலைக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து சீனாவின் தொடர்பை துண்டிக்க டிக்டாக்கின் தாய் நிறுவனமான ’பைடான்ஸ்’ என்ற நிறுவனம் அதிரடியாக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பைடான்ஸ் நிறுவனத்திற்கு ஏற்கனவே லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், மும்பை, டப்லின் ஆகிய நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன என்பதால் இந்த ஐந்து நகரங்களில் ஏதாவது ஒன்றில் தனது தலைமை அலுவலகத்தை மாற்ற ’பைடான்ஸ்’ நிறுவனம் முடிவு செய்து இருப்பதாகவும் இது குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியது.

அனேகமாக மும்பையில் தலைமை அலுவலகத்தை மாற்ற அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் டிக் டாக் நிறுவனத்தின் தலைமையகம் மாற்றப்பட்டால் டிக்டாக் செயலிக்கு தடை நீக்கம் செய்யவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.