மருத்துவத் துறையில் ஒரு மைல்கல் சாதனை… புற்றுநோய்க்கு நிரந்தர தீர்வு!

உயிர்க்கொல்லி நோயாகக் கருதப்படும் புற்றுநோய்க்கு நிரந்தர தீர்வு ஒன்றைக் கண்டுபிடித்து விட்டதாக அமெரிக்க விஞ்ஞானிகள் புது தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தல் நோயாகக் கருதப்படும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். மேலும் கோடிக்கணக்கான மக்கள் சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். இதைத்தவிர கீமோதெரபி, கதிர்வீச்சு அறுவைசிகிச்சை என்று இந்நோயால் மக்கள் கடும் அவதியுற்று வரும் நிலையில் அமெரிக்காவின் மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் சென்டர் எனும் ஆராய்ச்சி கூடத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தற்போது நம்பிக்கை அளிக்கும் வகையில் தீர்வினை கொடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் 18 நோயாளிகளுக்கு தொடர்ந்து 6 மாதங்கள் டோஸ்டார்லிமாப் எனும் மருந்து கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையின் முடிவில் அவர்களின் உடல்களில் புற்றுநோயக்கான செல்கள் முற்றிலும் அழிந்து விட்டதாகவும் மேலும் புற்றுநோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அவர்களின் உடலில் புதிதாகத் தோன்றியிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் பல்வேறு மூலக்கூறுகளைக் கொண்டுள்ள டோஸ்டார்லிமாப் எனும் மருந்தை 3 வார இடைவெளியில் தொடர்ந்து 6 மாதங்கள் உட்கொள்வதால் புற்றுநோய்க்கான அறிகுறியே நோயாளிகளின் உடலில் இருந்து மறைவதையும் மருத்துவர்கள் கண்டுபிடித்து உள்ளனர். மருத்துவத் துறையில் புது நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கும் இந்த ஆய்வு குறித்துப் பேசியுள்ள விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இனி பல முன்னேற்றங்கள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.