சென்னை பீனிக்ஸ் மால் சென்ற 3300 பேர்களுக்கு சோதனை: எத்தனை பேருக்கு கொரோனா?

சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்த 6 பெண்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததை அடுத்து அந்த 6 பேர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து சமீபத்தில் அறிக்கை ஒன்றை சென்னை மாநகராட்சி வெளியிட்டது. அதில் கடந்த மார்ச் 10 முதல் 17 வரை பீனிக்ஸ் மாலுக்கு சென்றவர்கள் அனைவரும் தங்களை தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் குறித்த அறிகுறி ஏதேனும் இருந்தால் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

இதனையடுத்து மார்ச் 10 முதல் 17 வரை பீனிக்ஸ் மால் சென்ற 3300 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் பீனிக்ஸ் மாலில் வேலை செய்த இரண்டு பணியாளர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.