உருவானது நிவர் புயல்: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த மண்டலமாக உருவாகியதால் இன்று நிவர் புயல் உருவாகும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் நிவர் புயல் உருவாகிவிட்டதை சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.

வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிவர் புயலாக உருவானது என்றும், இந்த புயல் சென்னைக்கு தென்கிழக்கே 450 கி.மீட்டரில் புயல் மையம் கொண்டுள்ளது என்றும், தென்மண்டல வானிலை இயக்குநர் பாலசந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

நிவர் புயல் உருவான தகவல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னையில் பல பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. குறிப்பாக தி.நகர், நந்தனம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், தேனாம்பேட்டை, கொட்டிவாக்கம், திருவான்மியூர், அடையார், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கடலூரில் கடந்த சில மணி நேரங்களாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் அங்கு மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் புயல் பாதிக்கும் சென்னை உள்பட பல பகுதிகளில் மின்சாரம் விரைவில் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது