சென்னையில் மேலும் ஒரு காவல்துறை அதிகாரி தற்கொலை!

  • IndiaGlitz, [Tuesday,April 24 2018]

சென்னையில் கடந்த சில நாட்களாக காவல் துறையை சேர்ந்தவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சென்னையில் ஜெயலலிதா நினைவிடத்தில் ஒரு காவலரும், அயனாவரம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த ஒரு காவலரும் அண்மையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவங்களின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் காவல்துறை மீண்டு வராத நிலையில் தற்போது மேலும் ஒரு காவல்துறை அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை கொருக்குப்பேட்டை காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜோசப் என்பவர் இன்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தற்கொலைக்கு பணிச்சுமை காரணமாக ஏற்பட்ட  மன அழுத்தமா? அல்லது சொந்த பிரச்சனையா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து கொண்டு வருகின்றனர்

இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஜோசப்பின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.