சென்னை அரசு மருத்துவமனையில் தலைமை பெண் செவிலியர் கொரோனாவுக்கு பலி!

சென்னையில் கடந்த ஒரு வாரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500க்கும் மேல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த தலைமை பெண் செவிலியர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை நங்கநல்லூரை சேர்ந்த 58 வயது தலைமை பெண் செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா. இவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியர்களுக்கான பணி ஒதுக்குதல் உள்ளிட்ட பணிகளை செய்து வந்ததாக தெரிகிறது. மேலும் இவர் அரசின் இரண்டு மாத பணி நீட்டிப்பின் கீழ் பணியாற்றி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி திடீரென்று அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்

இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸால் உயிரிழந்த முதல்பெண் தலைமை செவிலியர் இவர் தான் என்பதால் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது