சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,October 17 2019]

சென்னையில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில் சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளதை சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னையின் பல்வேறு இடங்களில் குறிப்பாக கிண்டி, தரமணி, சைதாப்பேட்டை, பட்டினப்பாக்கம், எழும்பூர், திருவல்லிக்கேணி, மெரினா, விமானநிலையம், புரசைவாக்கம், வியாசர்பாடி, தேனாம்பேட்டை, அண்ணாநகர், நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

இதனால் பள்ளிகளுக்கு இன்றூ விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் மாணவர்களும் பெற்றோர்களும் செய்தி சேனல்களை காலை முதல் பார்த்து வந்தனர். ஆனால் சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்துள்ளதால் மாணவர்கள் பள்ளி செல்ல தயாராகி வருகின்றனர்.